Sunday 14 July 2013

போராட்ட வதந்திகளை ஊதித்தள்ளிய கூடங்குளம் அணுமின் நிலையம் - ஒரு தொகுப்பு



நாளேடுகள் முழுவதும் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தொடங்கிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் அதே சாதனையின் தருணங்களில் , இந்த அணுமின் நிலையம் எத்தனை விதமான தவறான வதந்திகளுக்கு ( போராட்டக்காரர்களின் ) முற்றுபுள்ளி வைத்திருக்கிறது என்று எண்ணிப்பார்த்ததின் விளைவு தான் இந்த பதிவு .




1.  கூடங்குளம் பகுதி முழுவதும் காலி செய்யப்படும் என்ற முதல் வதந்தி :-

பெரும்பாலான உள்ளூர் கிராம மக்கள் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட ஆரம்பித்ததே இந்த வதந்தியை நம்பித்தான் .  இது தான் போராட்டத்திற்கு மக்களை கூட்டி சேர்த்த யுத்தி என்று கூட என்னால் சொல்லமுடியும் . போராட்டம் தொடங்கிய ஆரம்ப கட்டங்களில் வலைப்பூவில் கூட அநேக பதிவர்கள் இந்த காரியத்தை முன் நிறுத்தி பதிவெலுதியதை  நாம் படித்திருக்கிறோம் . 
 
 3000 புல்டோசர்கள் தயாராய் இருப்பதாகவும் , அவைகள் மூலம் கூடங்குளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் தரைமட்டமாக்கப்படும் என்றும் இந்த பகுதி மக்கள் பயமுறுத்தப்பட்டு இருந்தனர் என்பதையும் நாம் அறிந்து இருக்கிறோம் . அந்த மாதிரி தருணங்களில் எல்லாம் அரசும் சரி , அணுமின் நிலைய நிர்வாகிகளும் சரி " மக்கள் தங்கள் இருப்பிடங்களை காலி செய்ய வேண்டிய அவசியம் இல்லை " என்று மாறி மாறி சொன்னபோதும் , போராட்டக்காரர்கள் அவைகளை பொய் என்றே மக்களை நம்ப வைத்தனர் .
 

இப்படிப்பட்ட தருணத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கினபடியால் " மக்களை காலி செய்யவேண்டும் என்ற வதந்தி பொய்யானது "


2. அணுமின் நிலையம் இயங்கினால் அருகில் வாழ முடியாத அளவுக்கு சத்தம் உண்டாகும் என்ற வதந்தி :-
 
 
கூடங்குளம் அணுமின் நிலையம் தனது சோதனை ஓட்டத்தை தொடங்கிய நாட்களில் , அணுமின் நிலையத்தில் இருந்து கடுமையான சத்தமும் , அதிர்வுகளும் , புகையும் உண்டானது என்றும் , எனவே அணுமின் நிலையம் இயங்கும் காலம் முழுவதும் இப்படிப்பட்ட சத்தங்கள் அதிர்வுகள் உண்டாகும் என்றும் மக்கள் நம்பவைக்கப்பட்டனர்


ஆனால் இந்திய அணுமின் கழகமோ , அணுமின் நிலையங்கள் இயங்கும் போது சத்தம் உண்டாகாது என்றும் , சோதனை ஓட்டத்தின் போது அதிகப்படியான நீராவி உற்பத்தியானால் அதை வெளியேற்றும் முறையை (   safety Valve ) பரீட்சித்து பார்த்ததினால் மாத்திரமே இந்த சத்தம் வந்தது என்று விளக்கினாலும் அதை கேட்பதற்கு யாரும் இல்லை 

அணுமின் நிலையத்தினால் உண்டாக கூடிய சத்தத்தை குறித்து நிபுணர் குழுவிடமும் போராட்ட குழு கேள்வி எழுப்பி இருந்தது . அதற்க்கு சத்தம் ஏதும் உண்டாகாது என்ற நிபுணர் குழுவின் பதில் ஏனோ மக்களிடம் சேர்க்கப்படவே இல்லை .


இன்றைக்கும் கூட சில வலைபூ நண்பர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சத்தம் ஏதும் வரவில்லை எனவே அணுஉலை இன்னும் இயங்கவே இல்லை என்று ஆணித்தரமாக எழுதுவதை பார்த்தால் சிரிக்கவா அல்லது அழுவதா என்று தெரியவில்லை


(Source : https://www.facebook.com/henavel?fref=ts)

ஆனால் கூடங்குளம் அணுமின் நிலையம் சத்தமில்லாமல் தனது இயக்கத்தை தொடங்கி இருப்பது இந்த வதந்திக்கு வைத்த ஒரு பெரிய முற்றுப்புள்ளி தானே .

3. தரமற்ற பொருட்களால் ஆன் கட்டுமானம் என்ற வதந்தி :

ஆரம்ப நாட்களில் இருந்தே திரு உதயகுமாரும் அவரை சேர்ந்தவர்களும் கூடங்குளம் அணுமின் நிலையம் கடல் மண்ணால் கட்டப்பட்டது என்றும் அதில் உள்ள பொருட்கள் எல்லாம் தரமற்றவை என்றும் சொல்லி மக்களை ஏமாற்றியே வந்தனர் .


அரசும் , அறிஞர்களும் , அறிவியல் மேதைகளும் பொருட்களின் தரத்தை குறித்து சான்று கொடுதபோதேல்லாம் , அவர்களை தூற்றியே வந்த போராட்டகாரர்களின் பொய்யான வதந்தி இன்று தவிடு பொடியாயிற்றெ கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கதொடங்கியதால் .
 
 
இப்படி வதந்திகளை தவிடு பொடியாக்கி , அறிவியலின் அதிசயத்தை மக்கள் உணர தொடங்கி இருக்கும் அதே நேரத்தில் திரு உதயகுமாரின் புது போராட்ட அறிவிப்பு. அதன் பெயர் " மக்கள் திரள் மரண போராட்டமாம் ".  எங்கிருந்து கிடைக்கிறதோ இவருக்கு இப்படி பெயர்கள் . இப்பொழுதே தெளிய தொடங்கி இருக்கும் மக்கள் கூட்டம் இவருக்கு புரிய வைக்கும் நாங்கள முட்டாள்கள் அல்ல என்பதை

கூடங்குளம் அணுமின் நிலையத்தை குறித்த அறிவியல் தொகுப்பை இதே வலைப்பூவில் நான் எழுதி இருக்கும் "கூடங்குளம் அணுமின் நிலையம் - ஒரு அறிவியல் தொகுப்பு" என்ற சுட்டியை சுட்டி படியுங்கள்

Friday 12 July 2013

கூடன்குளமே வருக ...! மின்சாரம் தருக .....!




பல வருடங்களாக காத்திருந்த கூடங்குளம்  அணுமின் நிலையம் இயங்குவதற்கு அணுசக்தி ஆணையம் அனுமதி கொடுத்திருப்பது மிக முக்கியமான நிகழ்வு . இதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்திக்கான ஆயத்தப்பணிகள் தொடங்கி உள்ளதாக தெரிகிறது .  எல்லாரும் இப்பொழுது பரபரப்பாக பேசுகிற ஒரு வார்த்தை  கிரிடிகாலிட்டி       ( Criticality ) என்பதே.  அணுமின் நிலையத்திற்கும் இந்த வார்த்தைக்கும் என்ன தொடர்பு என்பதை சிந்தித்ததின் விளைவே இந்த பதிவு .



கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்தும் , அதை குறித்த தவறான தகவல்கள் குறித்தும் ஏற்க்கனவே இதே வலைப்பூவில் பல இடுகைகள் எழுதியுள்ளேன் . இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படும் முறைகள் குறித்து இதில் நாம் பார்க்கலாம் .

அணுமின் நிலையத்தில் உள்ள அணு கொள்கலன் ( reactor vessel ) என்ற பகுதி மிக முக்கியமான ஒன்றாகும். இந்த கொள்கலனில் தான் அணு எரிபொருளான யுரேனியம் வைக்கப்பட்டு இருக்கும் . இந்த யுரேனிய அணுக்கள் சிதைவுறுவதால் உண்டாகும் தொடர்வினையும் , அதனால் ஏற்ப்படும் வெப்பமும் , நீராவி உண்டாக்குவதற்கு பயன்படுகிறது என்பதை நாம் அறிவோம் . அதை குறித்த செய்திகள் இந்த வலைப்பூவிலும் உள்ளன.

யுரேனிய எரிபொருள் இருக்கும் கொள்கலனுக்குள் அணுப்பிளவு தொடர்வினையை ஊக்குவிப்பதற்காக Neutron Sources இருக்கும் . இந்த neutron கள் தான் அணுவை பிளக்கும் என்பதை நாம் அறிந்து இருக்கிறோம் .  அதனால் இந்த வினை தொடங்காதபடிக்கு அணு கலன் முழுவதும் போரோன் நிறைந்த தண்ணீர் நிரப்பப்பட்டு இருக்கும் . அது கிட்டத்தட்ட 17% வரை இருக்கும் . மேலும் இந்த neutron களை கட்டுப்படுத்துவதற்க்காக காட்மிய கழிகள் (Control  rods )பொருத்தப்பட்டு இருக்கும் .  இந்த போரோன் மற்றும் காட்மியம் போன்றவை neutran களை விழுங்கும் தன்மை உடையதால் அணுப்பிளவு வினை தொடங்காமல் இதுவரை இருந்தது 

Criticality என்றால் என்ன ...?
அணு கலனில் இருக்கும் போரான் கலந்த தண்ணீரில் உள்ள போரானின் அடர்த்தி (  Concentration ) படிப்படியாக குறைக்கப்படும் . அதாவது கிட்டத்தட்ட 8 % அளவுக்கு . அதே நேரத்தில் காட்மிய கட்டுப்படுத்தும் கழிகள் மெதுவாக உயர்த்தப்படும் . இப்படி படிப்படியாக போரான் மற்றும் காட்மியம் விலக்கிக்கொள்ளப்படும் பொழுது , Neutran Sources ல் இருந்து புறப்படும் neutran கள் யுரேனிய அணுக்களுடன் மோதி தொடர்வினையை உருவாக்கும் .   Steam Generator என்ற நீராவி கொள்கலனில் நீராவி உற்பத்தி செய்யும் அளவுக்கு வெப்பம் உண்டானவுடன் , வேண்டிய அளவு கட்டுப்படுத்தும் கழிகள் இறக்கப்பட்டு தொடர்வினை கட்டுப்படுத்தப்படும் ( Controlled Chain Reaction ).  இதே செயலை மாறி மாறி செய்து அனுகலனில் வெப்பத்தை நிலைநிறுத்தும் முறையே Criticality என்று அழைக்கப்படுகிறது.

இந்த பகுதி ஒரு அணுமின் நிலையம் இயங்குவதற்கு தேவையான முக்கிய மைல் கல் என்றே சொல்லலாம் .   அதன் பிறகு Synchronization என்று சொல்லப்படுகிற நிகழ்வின் மூலமாக அணுகூடத்தில் உற்பத்தியாகிற நீராவி turbine வழியாக கொண்டுசெல்லப்பட்டு அங்கு உள்ள பிளேடுகளில் மோத வைக்கப்படும் . அப்படி செய்வதால் Rotor சுற்ற ஆரம்பித்து Stator மூலமாக மின்சாரம் கிடைக்கும் 

கொஞ்சம் கொஞ்சமாக மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வெகு விரைவில் 1000 MWe மின்சாரம் தயாரித்து தமிழகத்தின் மின் பற்றாக்குறையை ஓரளவாவது தீர்க்க                          " கூடன்குளமே வருக ...!,மின்சாரம் தருக....!"

Friday 10 May 2013

மதிப்பெண் என்ற எமன் - வேதனையான தகவல்


+2 தேர்வு முடிவுகள் கடந்த 09 05 2013 அன்று வெளியிடப்பட்டது .   மாநில மற்றும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்கள் குறித்து பத்திரிகைகள் பரபரப்பு செய்திகள் வெளியிட்டுக்கொண்டு இருக்க , அதிகம் வெளிவராத சில வேதனையான செய்திகளை உள்ளடக்கியது தான் இந்த கட்டுரை .



போட்டிகள் மிகுந்த   உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று பெரும்பான்மையான பெற்றோர்கள் நினைப்பதும் ,  தாங்கள் அடைய முடியாத கனவுகளை தங்கள் பிள்ளைகள் அடையவேண்டும் என்று ஆசைப்படுவதும் நியாயம் தான் .  ஆனால் அங்கு தான் அவர்களை அறியாமல் நெருக்கடியை உண்டாக்குகிறார்கள் என்பது தான் வேதனை உண்டாக்கும் விடயம் .



குறிப்பாக 10 வது வகுப்பு அல்லது +2 படிக்கும் குழந்தைகள் வீட்டில் பிள்ளைகளை விட பெற்றோர்கள் படும் பாடு தான் அதிகமாக இருக்கும் .   காரணம் மதிப்பெண் என்ற போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற ஆசை தான் 


சில பெற்றோர்கள் பிள்ளைகளை வெகுவாக நெருக்குவதால் , அவர்களின் எண்ணம் சிந்தனை எல்லாம் யோசித்து செயல்படுவதை விட்டு விட்டு இயந்திர ரீதியில் பாடங்களை படிக்கிறார்கள் .    இவ்வாறு செய்வது மதிப்பெண்களை தரும் என்றாலும் அறிவை மழுங்கடிக்கும் எனபதே உண்மை .   மாறாக பிள்ளைகளும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள் .  எனவே தான் தேர்வு முடிந்த பின்பு ,மதிப்பெண்களை எதிர்கொள்ளுவது கூட மாணவர்களால் முடியவில்லை 



இப்படி மன நெருக்கடியில் நாகர்கோயில் பகுதியில் ஒரு மாணவனும் , சிந்துஜா என்கிற மாணவியும் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று நாளேடுகளில் வாசிக்க நேர்ந்தது.  இன்னும் பல ஆயிரம் மாணவர்கள் ( மதிப்பெண் போட்டியில் பின் தங்கியவர்கள் ) இப்படி மன நெருக்கடியில் சிக்கி தான் உள்ளார்கள்


 அதிக மதிப்பெண்கள் பெற்றால் நல்ல பாடங்கள் எடுத்து படிக்க முடியும் என்பது உண்மை தான்.   ஆனால் மதிப்பெண்கள் எமனாக பிள்ளைகளை அழிக்கக்கூடாது .   வாழ்வதற்கும் , வளர்வதற்கும் அநேகம் வழிகள் இந்த உலகத்தில் இருக்கும் பொழுது , மதிப்பெண்களை காரணம் காட்டி , பிள்ளைகளை ஒடுக்குவதை தவிர்த்து ,  சந்தோஷ வாழ்க்கையின் முகடுகளை பக்குவமாய் எடுத்து கூறினால் இளைய தலைமுறை வளரும் என்பதில் சந்தேகம் இல்லை


Thursday 9 May 2013

IPL போட்டிகள் - ஆச்சரியம் கலந்த நிஜங்கள்



சென்ற மாதம் ஆரம்பித்து இன்னும் முடியாமல் அநேகம் பேருடைய தூக்கத்தை தொலைத்து கொண்டு இருக்கும் IPL  கிரிக்கெட் போட்டிகளை குறித்து நாம் அறியாமல் இருக்கவே முடியாது .   இந்த போட்டிகளில் அநேகம் ஆச்சரியங்கள் கலந்துள்ளதை யாரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது .  அவைகளை நாம் ஆராய்ந்து பார்த்தால் கொஞ்சம் அதிர்ச்சி கூட வரலாம் .



  • 5 நாட்கள் கிரிக்கெட் விளையாடி விட்டாலே , ஓய்வு தேவைப்படுகிறது என்று ஏக்கப் பெருமூச்சுவிடும் நமது வீரர்கள் ஒரு நாள் விட்டு அடுத்த நாள் வெவ்வேறு இடங்களுக்கு சென்று சளைக்காமல் விளையாடுவது எனது முதல் ஆச்சரியம்.
  • கிரிக்கெட் விளையாட்டை வளர்க்கபோவதாக சொல்லி ICL ( Indian Cricket League ) போட்டிகளை தொடங்கினார் திரு கபில்தேவ் .  பெரிய துரோகம் செய்துவிட்டது போல அவரை புறந்தள்ளிய பிசிசிஐ , ICL போட்டிகளுக்கு மாற்றாக IPL தொடங்கியது மாத்திரமல்ல , திரு கபில்தேவ் உடனான அனைத்து உறவுகளையும் முறித்தது .  ஆனால் அப்படிப்பட்ட கபில்தேவ் இந்த IPL போட்டிகளில் "ஜும்சிக்கு " என்று நடனம் ஆடுவது எனது பெரிய ஆச்சரியம்  .
  • தனது நிறுவனத்தில் ( Kingfisher ) வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கூட தரமுடியாத பரம ஏழை திரு விஜய் மல்லையா அவர்கள் பல கோடிகளை  ( 111.6 மில்லியன் USD, அதாவது கிட்டத்தட்ட 558 கோடி ) கொட்டி ராயல் challngers என்ற அணியை வாங்கி இருப்பது எனது வியப்பின் அடுத்த பக்கம்  .
  • பல ஆயிரம் கோடி பணத்தை IPL மூலமாக சம்பாதிக்கும் பிசிசிஐ , இன்னும் அரசுக்கு செலுத்தவேண்டிய வரிப்பணம் சில கோடிகளை செலுத்த தாமதிப்பது ஒரு ஆச்சரியம் தானே 
  • நாள் முழுவதும் ரத்த வியர்வை சிந்தி உழைத்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவி பிள்ளைகளிடம் அன்பாக சில வார்த்தைகளை பேசுவதை கூட மறந்துவிட்டு IPL காட்சிகளில் மூழ்கி கிடக்கும் நண்பர்கள் என் வியப்பின் உச்சகட்டம் .
நான் கிரிக்கெட் விளையாட்டிற்கு எதிரானவன் அல்ல .  ஆனால் விளையாட்டு என்ற போர்வையில் ஒரு வியாபாரம் எழும்பி இருப்பதை தான் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை