Wednesday 21 December 2011

வேற்றுமையில் ஒற்றுமை - எங்கே போனது ...?


தற்பொழுது தேசத்தில் நடந்து வரும் சில விரும்ப தகாத சம்பவங்களில் முல்லை பெரியாறு அணை விவகாரம் மிக பெரிய பங்கு வகித்தாலும்  , அதை குறித்த செய்திகளை நாளேடுகளில் வாசிக்கும் போது பெரும் துயரம் அடைந்தேன் .

தமிழக மக்கள் பலர் கேரளாவில் தாக்கப்பட்டதாகவும்  ,  சபரிமலை போன நண்பர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் , அதே போல கேரள நண்பர்களின் கடைகள் சிலரினால் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் , பாதுகாப்பு குறித்த அச்சம் இரண்டு மாநில நண்பர்களிடமும் ஏற்ப்பட்டிருப்பதையும் வாசிக்கும் போது மனம் நொந்து போனேன் .


சிறு வயதில் பள்ளியில் படிக்கும் போது ஒவ்வொரு வாரம் திங்கள் கிழமையும் காலையில் உறுதி மொழி என்று ஒன்றை சத்தமாய் வாசிக்க சொல்லுவார்கள் . இப்பொழுதும் என் மனதில் அது ரீங்காரமிடுகிறது.

என் தாய் நாடு இந்தியா ....
இந்தியர்  அனைவரும் என் உடன்பிறந்தவர்கள் ...
என் தாய் திரு நாட்டை
உளமார நேசிக்கிறேன் ......
அதன் புகழுக்கு ஏற்ப
நன்மகவாய் விளங்க என்றும் முயல்வேன்....
அன்புடன் என்னை ஈந்த அன்னை ....
ஆருயிர் தந்தை ...
ஆன்ற முதியோர் அனைவரையும் வணங்குவேன் .....
என் நாட்டிற்கும்  அதன் மக்களுக்கும்
என் வந்தனம் என்றும் உரியது ....
என் நாட்டவர் நலமும் வளமுமே
இன்பமென உளம் பூரிப்பேன் ........

ஒரு கோரசாய் உறுதி மொழியை சொல்லி முடித்த பிறகு நிலவும் சிறிய நேர அமைதியில் தேசத்திற்காக நாங்கள் இருக்கிறோம் என்ற பெருமையை உணர்ந்த தருணங்களை நினைத்து பார்க்கிறேன்.



வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது தாய் திரு நாட்டின் தாரக மந்திரம் என்பதை அழுத்தம் திருத்தமாக முழங்க வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் .    முல்லை பெரியாறு அணை விவகாரம் மிக முக்கியமானது என்பதை நான் மறுக்கவில்லை .  ஆனால் அதே நேரம் ,  ஒன்றும் அறியாத அப்பாவி தமிழர்களையும்  , மலையாள நண்பர்களையும் தாக்குவது எந்த விதத்தில் நியாயம் ....?

நமது தேசத்தின் ஒற்றுமையை குலைக்க தீய சக்திகள் முயற்சிக்கலாம்  , தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கலாம்  ,  நெருப்பு மூட்டி அனல் காயலாம் .  இந்த இந்தியனின் தாழ்மையான வேண்டுகோள் என்னவெனில் அமைதி காத்து  , வன்முறைகளில் ஈடுபடாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் , வன்முறைக்கு பாதிக்கபடுபவர்களுக்கு உதவுவோம் ...   தீய சக்திகளை அடையாளம் காண்போம் .... தேசத்தை காப்போம்  , தேசத்திற்காய் உழைப்போம் ...

நம் தேசம் ....நம் இந்தியா .... வந்தே மாதரம் ....!

Sunday 18 December 2011

கூடங்குளம் - ஒரு புரியாத புதிரா ..?

இந்த தலைப்பை பார்த்தவுடன் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது அல்லவா ...? ஆம் ... கூடங்குளத்தில் நிகழும் சில செய்திகளை பார்க்கும் போது எனக்கும் கொஞ்சம் வித்தியாசமாக தான் இருக்கிறது ...!




 
பிரதமர் அவர்களின் ரஷிய பயணத்தை கண்டித்து கூடங்குளம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் போராட்டத்தில் 3  நாட்கள் ஈடுபட்டார்கள் என புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கூறினார்கள் .  இந்த போராட்டத்தை முன் நின்று நடத்தும் திரு . உதயகுமார் அவர்களிடம் பேட்டி கண்டபோது , திரு . உதயகுமார் மத்தியில் ஆளும் அரசு தமிழக மக்களுக்கு எதிரானது என்று பேசினார் .  அதாவது 8  கோடி மக்களுக்கும் மத்திய அரசு துரோகம் செய்து தான் அணுமின் நிலையத்தை அமைக்கிறது எனவும்  ,  கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் 3  பேரின் தூக்கு தண்டனையில் மத்திய அரசின் அணுகுமுறையை குறித்தும் பேசினார் ....

அட .... 8  கோடி தமிழனுக்கும் புது தலைவன் கிடைத்து விட்டான் போல என்று தான் நினைக்க தோன்றுகிறது .

Conflict management என்ற தலைப்பில் பல வருடங்கள் அமெரிக்காவில் பாடம் எடுத்த திரு . உதயகுமார் , தமிழ் வளர்ச்சிக்கும்  , தமிழனின் வளர்ச்சிக்கும் என்ன செய்தார் ...? இன்று வரை அமெரிக்க குடியுரிமை வைத்திருக்கும் திரு . உதயகுமார் தமிழன் என்று சொல்லும் தகுதியை எப்பொழுது பெற்றார் என்பது ஒரு புரியாத புதிர் தான் .


தமிழகத்தில் நிலவிய சில அசாதாரண அரசியல் சூழ்நிலைகளை தனக்கு சாதகமாக்கி கொண்டு  , அணுமின் நிலையங்களை குறித்த அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி  , இன்னும் அச்சம் தீரவில்லை என்ற ஒரு மாயையை உலகிற்கு ஏற்படுத்தி  , கடைசியில் வரும் 31  தேதிக்குள் அணு எரிபொருளை அணுமின் நிலையத்தில் இருந்து அகற்றாவிடில் குண்டு வீசி அணுமின் நிலையத்தை அழிப்போம் என்று பகிரங்கமாக மத்திய மாநில அரசாங்கத்திற்கு சவால் விடுகிறார் என்றால் ( தகவல் : தினகரன் , தினமலர் ) , இவரின் பின்னணி கொஞ்சம் ஆபத்தானது போல விளங்குகிறது .  இந்த சம்பவம் குறித்து கூடங்குளம் மற்றும் அதன் அருகில் உள்ள விஜயாபதி கிராம நிர்வாக அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் எனவும் அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது .


 இது வரையிலும் நானும் இந்த போராட்டத்தை மக்கள் அச்சத்தினால் விளைந்த போராட்டம் என்று தான் நினைத்து கொண்டு இருந்தேன் .  இப்பொழுதும் என கோபம் மக்கள் மீது அல்ல .  அவர்கள் பயமுறுத்த பட்டதால் போராட விழைகிறார்கள்.  என கோபம் முழுவதும் தேசத்தின் நலனுக்கு எதிரான சில புல்லுரிவிகள்  மீது தான் .


வெளிநாட்டில் இருந்து பண உதவி வருவதாக மத்திய அமைச்சர் குற்றம் சாட்டின போதும்  , நான் அவ்வளவாக அதை ரசிக்கவில்லை .  ஒவ்வொரு முறையும் மத்திய அமைச்சர் மீது வழக்கு தொடரப்போவதாக பேட்டி கொடுத்து வந்த திரு. உதயகுமார்  , இதுவரை எந்த வழக்கு தொடுக்காமல் இருக்கிறார் என்றால் அதுவும் ஒரு புதிர்  தானே ...

126  வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட முல்லை பெரியார் அணை பாதுகாப்பானது  , பூகம்பத்தை தாங்கும் சக்தி படைத்தது  ( நானும் அப்படி தான் நம்புகிறேன் ) என்பதை நம்பும் அரசியவாதிகளும்  , தலைவர்களும்  , பல அடுக்கு நவீன பாதுகாப்பு வசதிகளுடன் கட்டப்பட்ட அணுமின் நிலையத்தை எதிர்க்கும் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதும் ஒரு புதிர் தானே ....

ஒரு வாரத்திற்கு முன்பு  மாண்புமிக தமிழக மின்துறை அமைச்சர் பேசும் போது மார்ச் மாதம் கூடங்குளத்தில் இருந்து கிடைக்கும் 930 MWe தமிழக மின்சார பற்றாக்குறையை தீர்க்கும்  ( நன்றி : தினகரன் ) என்றாலும்  , மாண்புமிகு தமிழக முதல்வர் வேடிக்கை பார்ப்பதும்  , கடிதம் எழுதுவதும் ஒரு புதிர் தானே ...

 இப்படி பல புதிர்களை தாங்கி கூடங்குளம் நின்றாலும்  ,  இந்த இந்தியனின் விருப்பம் என்னவெனில்  அப்பாவி மக்களை பயமுறுத்தி  , அவர்களை மனித கேடயங்களாக நிறுத்தி கலவர பேச்சை பேசும் சதிகார கூட்டத்திற்கு எதிரான குரல் மாத்திரமல்ல ஒரு கூட்டம் இளையோர்களும் எழும்பவேண்டும் .


 நிறுத்தி நிதானமாக வாசியுங்கள் .   என கருத்தும் , எழுத்தும்  அப்பாவி மக்களுக்கு விரோதமானது அல்ல  , ஆட்டு தோலை போர்த்தி கொண்டு உலா வரும் சில புத்திசாலிகளுக்கு எதிரானது ....

Monday 12 December 2011

அரசியலே ... உன் பெயர் தான் ரெட்டை வேடமோ ...?


முல்லை பெரியார் என்ற பெயர் தான் இப்பொழுது தமிழகத்தை கலக்கி கொண்டு இருக்கிறது .   நமது ஊர் அரசியல் அண்ணாச்சிகளும் வேட்டியை மடித்து கட்டி கொண்டு கேரள அரசுக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள் .  அனைத்து நாளேடுகளிலும் வெளிவரும் பிரபல அரசியல் தலைவர்களின் பேட்டிகளை படித்த போது தான் , இந்த கட்டுரையை வெகு நாள் கழித்து எழுத வேண்டும் என்று உந்தப்பட்டேன் .



 1887   ஆம் ஆண்டு  கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்ட இந்த அணை கேரள பிரதேச பகுதியில் கட்டப்படிருந்தாலும்  , அந்த அணையின் மூலம் பயன் பெறுவது தமிழ்நாடு என்பது தான் இந்த பிரச்சனையின் மூலக்காரணம்.  இந்த அணை பலவீனமடைந்து விட்டது என்று சொல்லி கேரள அரசு புதிய அணை கட்ட முயற்சி செய்வதும்  ,  அந்த அணை பலமானது என்று தான் தமிழக அரசியல்வாதிகள்  கூறுவதும் இந்த பிரச்சனையை அதிகரித்து உள்ளது.   



திரு . வைகோ அவர்கள் இந்த பிரச்னையை குறித்து சங்கரன்கோவில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசும் போது  " பூகம்பமே வந்தாலும் முல்லை பெரியாறு அணை உடையாது " என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அந்த அணையின் பாதுகாப்பு நிபுணர் குழுவால் உறுதிபடுத்தப் பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்  ( நன்றி :  தினகரன்  , பக்கம் 15  , தேதி  12 - 12 - 2011 )
திரு தா . பாண்டியன்   , சிவகிரியில் நடந்த பொது கூட்டத்தில் பேசுகையில் , " 116  ஆண்டுகளே ஆன வலுவான நிலையில் உள்ளது அணை " என்று கூறியுள்ளார் , ( நன்றி :  தினகரன்  , பக்கம் 3  , தேதி  12 - 12 - 2011 )

எல்லாவற்றுக்கும் மேலாக திரு. திருமாவளவன் அவர்கள் பாராளுமன்ற வளாகத்தில் " அணை பாதுகாப்பு அற்றது என்று வதந்தியை பரப்பும் கேரள அரசை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தார் .


இது எல்லாம் நல்ல விடயங்கள் தானே என்று நினைக்க தான் தோன்றுகிறது .   ஆனால் இந்த தலைவர்களை பார்த்து நான் சில கேள்விகள் கேட்க வேண்டியுள்ளது .

முதலாவது .... திரு . வைகோ அவர்களே  ,  பூகம்ப பகுதி 3 ல் வரும் முல்லை பெரியார் அணை 116  ஆண்டுகள் ஆகியும் உடையாது என கூறுகிறீர்களே  ,  ஆனால் நவீன தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்டு வரும் கூடங்குளம் அணுமின் நிலையம் பூகம்ப பகுதி 2 ல் வந்தாலும் பூகம்பத்தால் பாதிக்கப்படும் என்று போராடினீர்கள் அல்லவா ...... அதன் அர்த்தம் என்ன ....?
திரு . திருமா ,  வதந்தியை பரப்பும் கேரள அரசை தண்டிக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்கும் நீங்கள்  ,  116  ஆண்டுகள் ஆன அணையின் பாதுகாப்பு நிபுணர் குழுவால் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கூறும் நீங்கள் ,  " கூடங்குளம் பாதுகாப்பானது என்று பெரும் அறிவியல்லாளர் திரு . அப்துல் கலாம் சொன்ன கருத்தை ஏற்க்கவில்லை .     வதந்திக்கு விரோதமாக போராடும் நீங்கள் ஏன்  கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு விரோதமாக வதந்திகளை பரப்பும் திரு . உதயகுமார் அவர்களோடு கை கோர்த்தீர்கள் ..?

அப்பாவி மக்களை உங்கள் அரசியலுக்கும்  , அதி புத்திசாலிதனத்திற்கும் பலியாக்காதீர் என்பதே இந்த இந்தியனின் கோரிக்கை

Friday 18 November 2011

கூடங்குளம் 50 கேள்விகள் - தொடர்ச்சி ....


எனது சென்ற பதிவின் (கூடங்குளம் - 50 கேள்விகள் ...ஆனால் ஒரே பதில் ) தொடர்ச்சியாக இந்த பதிவை எழுத முற்படுகிறேன் .   சென்ற பதிவில் கூடங்குளம் போராட்ட குழுவின் 50  கேள்விகளுக்கு அரசு பதில் கொடுப்பதில் சந்தேகம் இல்லை என்றும் ஆனால் போராட்ட குழு அதை ஏற்று கொள்ளுவதில் எனக்கு சந்தேகம் இருப்பதாகவும் எழுதியிருந்தேன் .   எனது சந்தேகம் இன்று நிறைவேறியதால் இந்த தொடர் பதிவை எழுதுகிறேன் .


கடந்த சில நாட்களாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தொடர் ஆய்வில் ஈடுபட்டிருந்த மத்திய ஆய்வு குழுவினர் , 50 கேள்விகளுக்கான பதில்களோடு , தமிழக அரசு அமைத்த குழுவோடு பேச்சு வார்த்தை நடத்த சென்றதாகவும் ,  கூட்டத்தின் நடுவில் போராட்ட குழுவினர் வெளிநடப்பு செய்ததாகவும் தொலைகாட்சிகளில் செய்தி வெளியாகி உள்ளது .  


இப்பொழுதும் எனது கேள்வி ஒன்றே ஓன்று தான் .   திரு உதயகுமார் அவர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பேசும் போது , " நாங்கள் 50  கேள்விகளை கேட்கிறோம் . அதற்கு பதில் தமிழ் ,  மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வேண்டும் .  அதை மக்களிடம் நாங்கள் சமர்ப்பித்து அவர்கள் கருத்தை கேட்டு அறிந்த பின்பு மக்களின் அச்சம் நீங்கி விட்டால் ,  நாங்கள் போராட்டதை கைவிடுகிறோம் "  என்று கூறினார் .


அது எப்படி ஐயா , நீங்கள் 50  கேள்விகளுக்கான பதிலை மக்களிடம் கொண்டு போய் சேர்க்காமல் , அந்த இடத்திலே வெளிநடப்பு செய்ய முடியும் ...?  எங்கே மக்கள் அச்சம் நீங்கி விடுவார்கள் என்ற பயமா உங்களுக்கு ...?.    இப்பொழுது தான் நீங்கள் மக்களின் அச்ச உணர்வை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறீர்களோ என்று நினைக்க தோன்றுகிறது ....
 

ரெட்டை வேடம் .... ரெட்டை வேடம் என்று அடிக்கடி சொல்லுவீர்களே ... அது இது தானோ ....?  காலம் பதில் சொல்லும் வரை நானும் கொஞ்சம் காத்திருக்கிறேன் .

Wednesday 16 November 2011

கூடங்குளம் - 50 கேள்விகள் ...ஆனால் ஒரே பதில்


கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து மக்கள் சில வாரங்களாக போராடி வருகிறதை  நாளேடுகள் மூலம் அறிந்திருக்கிறோம் .   மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லி கொள்ளும் தலைவர்கள் இந்த போராட்டத்தை முன் நின்று நடத்துகின்றனர் .  

போராட்டத்தின் அடிப்படை என்னவென்று பார்க்கும் போது அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட காரியங்களில் மக்களுக்கு ஏற்பட்ட அச்ச உணர்வு தான் என்று பொதுவாக அரசால் கூறப்பட்டுள்ளது .  அந்த அச்ச உணர்வை நீக்கும் வகையில் மத்திய ,  மாநில அரசுகள் தனி தனி குழுக்கள் அமைத்து பேச்சு வார்த்தைக்கு ஆயத்தமாகி வருகின்றன .


 பேச்சு வார்த்தையின் முதல் சுற்றில் போராட்ட குழுவின் சார்பில் 50  கேள்விகள் மத்திய குழுவிடம் அளிக்கப்பட்டதையும்  , அதற்க்கான பதில் தமிழ் , மலையாளம் , இந்தி  ( இது தமிழன் போராட்டம் என்று சொல்லுபவர்கள் கவனிக்க )  மொழிகளில் வேண்டும் என்று சொன்னதையும் ,  அதை மக்கள் மத்தியில் நாங்கள் விநியோகித்து அவர்கள் கருத்தை கேட்போம் என்று சொன்னதையும் நான் அறிந்த போது உண்மையில் கொஞ்சம் மகிழ்வடைந்தேன் .  ஏன் எனில் பாதுகாப்பான அணுமின் நிலையத்தை குறித்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தால் மக்கள் அச்சம் தீர்ந்து விடும் என்பது எனது எண்ணமாயிருந்தது . 

 இந்த சூழலில் தான்  போராட்ட தலைவர் திரு . உதயகுமார் மற்றும்  திரு . பொன்ராஜ்  ( திரு . அப்துல் கலாம் அவர்கள் உதவியாளர் )  இருவரும் கலந்து  கொண்ட ஒரு நேரடி நிகழ்ச்சியை  புதிய தலைமுறை தொலைக்காட்சியில் காண நேர்ந்தது .  அது தான் இந்த பதிவு எழுதப்படுவதின் மூலக்காரணம் .

 பதிவுலக நண்பர்கள் பல பேரும் இந்த அணுமின் நிலையத்தை பற்றி எழுதும் போது இப்படி ஒரு கேள்வியை கேட்பார்கள் , " அணுமின் நிலையத்தை பார்லிமென்ட் பக்கத்தில் அல்லது ஜனாதிபதி மாளிகையில் வைத்தால் என்ன ...?"  என்று .   நான் அந்த கேள்வியை படிக்கும் போது , என்ன இது சிறு பிள்ளை போல கேள்வி என்று நினைத்து கொள்ளுவேன் .

 ஆனால் இதே கேள்வியை  ( அணுமின் நிலையத்தை ஜனாதிபதி மாளிகையில் வைத்தால் என்ன ...? ) நேரடி ஒளிபரப்பில் பேசிக்கொண்டிருக்கும் போது திரு .  உதயகுமார் அவர்கள் திரு . பொன்ராஜ் அவர்களிடம் கேட்டார் .  திரு . பொன்ராஜ் சொன்னார் , " ஐயா , நீங்கள் மிகுந்த அறிவாளி என்று நான் பேசிக்கொண்டிருக்கிறேன் , ஆனால் நீங்கள் இப்படி கேள்வி கேட்கிறீர்கள் " என்று.   இந்த பதிலுக்கு திரு.  உதயகுமாரின் எதிர்ப்பு பலமாய் இருந்திருக்கும் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் தோற்று போய் விட்டீர்கள் .  ஆமா .... ஒரு அசடு வழிந்த சிரிப்பு ஒன்றை தான் திரு . உதயகுமார் பதிலாக கொடுத்தார் .

 இங்கே நான் ஒரு கேள்வி கேட்கிறேன் .  ஐயா , உங்களுக்கும் தெரியும் .   அணுமின் நிலையத்தை ஜனாதிபதி மாளிகையில் வைக்கமுடியாது என்று .  பின் ஏன் நீங்கள் இதே போல ஒரு கேள்வியை மக்கள் மத்தியில் கேட்டு மக்களை குழப்புகிறீர்கள் ....?  அதற்கு காரணம் என்ன ...?

எல்லாவற்றிற்கும் மேலாக முத்தாய்ப்பு வைத்தது போல , கடைசியில் அந்த நிகழ்ச்சி நிறைவுறும் போது திரு . உதயகுமார் ஒரு கருத்து சொன்னார் , " யார் சொன்னாலும் சரி , பிரதமர் சொன்னாலும் சரி , மூன்று அல்ல முப்பதாம் தலைமுறை அணுஉலை வந்தாலும் எங்களுக்கு அது வேண்டாம் " என்று .  

இங்கு தான் எனக்கு தூக்கி வாரிப்போட்டது .... அப்படியானானால் .....
  1. நீங்கள் எதற்கு குழு அமைத்தீர்கள் ...?
  2. எதற்கு 50  கேள்விகள் அமைத்து கொடுத்தீர்கள் ...?
  3. மக்கள் ஏற்று கொண்டால் போராட்டம் வாபஸ் என்று எப்படி சொன்னீர்கள் ...?
  4. உங்கள் கேள்விக்கு திரு . பொன்ராஜ் பதில் கொடுக்கும் போது ஏன் இடைமறித்து பேசினீர்கள் ...?
  5. தமிழனுக்கு எதிரான அணு உலை என்று சொல்லி ஏன் மூன்று மொழிகளில் பதிலை கேட்டீர்கள் ...?
இதெல்லாம் என்னுடைய சில கேள்விகள் ....ஏன் தெரியுமா ,  யார் சொன்னாலும் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லுபவர் கேள்விக்கு கொடுக்கப்படும் பதிலை எப்படி ஆய்வு செய்வார் ...?

இப்படி இவர் எடுக்கும் பல காரியங்கள் , இவர் மக்களின் அச்சத்தை தீர்க்கும் வழிமுறைகளை விரும்பவில்லை என்பதையும்  ,  மக்களை மேலும் மேலும் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டும் எனபதையும் மிக தெளிவாக் சுட்டி காண்பிக்கிறது .

இது இவரின் ரெட்டை வேடம் அல்லாமல் வேறென்ன ....? என்ற என கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லும் .  காத்திருக்கிறேன் அது வரை ...!

Sunday 13 November 2011

SUN TV செய்தது சரியா ...?


இன்றைய SUN தொலைகாட்சியின் செய்திகள் நேரத்தில் ATM இருக்குமிடங்களில் உள்ள பாதுகாப்பு நிலைகள் குறித்து ஒளிபரப்பபட்டது .   தொடர்ந்து வரும் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் விதத்திலும் , உண்மை நிலையை மக்கள் அறியும் விதத்திலும் இந்த செய்திகள் ஒளி பரப்ப பட்டது வரவேற்க தகுந்தது .  

கிட்ட தட்ட இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 2 மணி வரையிலும் சென்னை பட்டணத்தின் பெரும்பாலான ATM இருக்கும் இடங்களை SUN TV யின் தொலைகாட்சி பதிவு செய்தது .  அதில் இரவு 9 மணிக்கு ஒரு ATM ல் காவலாளி இல்லை என்றும் அதிகாலை 1  மணிக்கு ஒரு காவலாளி தூங்கி கொண்டு இருப்பதையும் ,  அதிகாலை 1 . 30 மணிக்கு தூங்கி கொண்டிருந்த ஒரு காவலாளியை எழுப்பியும் அற்புதமான ஒளி பரப்பை செய்து முடித்தது SUN TV யின் செய்திகள் .



அண்ணா சிலையின் முன் உள்ள ATM ல் இரவு 9 மணிக்கு காவலாளி இல்லை என்று ரிப்போர்ட்டர் பேசினார் .  அந்த இரவில் விழித்திருக்கும் சக்திக்காக ஏன் அவர் ஒரு தேநீர் அருந்த சென்றிருக்க கூடாது ....?

ICICI வங்கியின் ATM ஒன்றில் தூங்க கொண்டிருந்த ஒரு காவலாளியை எழுப்பி அவரது முகம் திரையில் நன்கு விழும் படி காண்பித்து அவரிடம் தூங்கி கொண்டிருக்கிறீர்களா என்று கேட்க அவர் மிகுந்த தர்ம சங்கடத்துடன் இப்பொழுது தான் என்று தலை குனிந்து சொல்ல ,  நான் ரொம்பவே நொந்து தான் போனேன் .

அந்த காவலாளி தூங்கினதை  நான் நியாயப்படுத்தவில்லை .  இருந்தாலும்   அவர் என்ன மாதிரி சூழ்நிலையில் அந்த இரவு வேலையை தேர்ந்து எடுத்தாரோ .. அநேக இரவு நேர காவலாளிகள் பகல் நேரம் வேறு வேலை செய்கிறதை நான் அறிந்திருக்கிறேன் .  எல்லாம் குடும்பத்தை காப்பாற்ற தான் .  நீங்கள் ஒரு வார்த்தை அவரிடம் பேசியிருக்கலாம் ( TV யில் காண்பிக்காமல் ) ,   இல்லை என்றால் ஒரு பொதுவான ரிப்போர்ட் கொடுத்திருக்கலாம் .  எதுவும் செய்யாமல் ஒரு அப்பாவியின் முகத்தை அழகாக காட்டி விட்டீர்கள் .   இனி மேல் அவருக்கு எப்படி அந்த வேலை நீடிக்கும் ..?
இப்படி அப்பாவி மக்களை முன்னால் நிறுத்தி , பிரபலமாகும் அநேகர் இந்த நாட்களில் எழும்புகிறார்கள் .  அதனால் பாதிக்கப்படுவது என்னவோ ... மக்கள் தான் 



என்னடா ... இந்த இருதயம் இப்படி எழுதுகிறார் என நினைக்கலாம் ...!  ஆம் ... வேறென்ன செய்ய ... பகலில் எல்லாரும் விழித்திருக்கும் போதே கோடி கோடியாய் கொள்ளை அடித்து ஊரை ஏமாற்றும் கயவர்களை விட்டு அப்பாவி மக்களை முன் நிறுத்தி பிரபலமான இந்த செய்கை சரி தானா ..?  என்பதை  இப்பொழுதும் சிந்தித்து கொண்டு தான் இருக்கிறேன் .

Friday 11 November 2011

தமிழ்நாடு அரசியல் - இது ஒரு கற்பனை ( ஆனால் நடக்கலாம் )



அக்கா.. கருணாநிதி பெயர் இருக்கிற எல்லாவற்றையும் மாத்தனும் .   தமிழ் செம்மொழி அப்படின்னு நான்தான் அறிவிக்க செய்தேன் என்கிறாரேதமிழ் செம்மொழி இல்லை..... அப்படின்னு ஒரு சட்டம் போட்டுடுவோம் .....

ஐயையோ... அப்படியெல்லாம் செய்தால் பெரிய பிரச்சினை ஆகிவிடும்வேணும்ன்னா ... இந்த மேம்பாலங்களை எல்லாம் இனிமேல் கார் போககூடாது அப்படின்னு ஒரு சட்டம் போட்டுட்டு அதை நடைபாதை ஆக்கிடலாம் ....






அப்பா ... என்ன தான் நடக்குது இங்க .... ஒன்னுமே எனக்கு புரியவில்லை ....


ஏம்பா ... எனக்கே புரியவில்லைநான் வேற என் காலத்திற்கு பிறகு என் வீடு மருத்துவமனை ஆகும் அப்படின்னு சொல்லிட்டேன்எங்கே அதை மருத்துமனையிலிருந்து மார்ச்சுவரியா மாற்றிடுவாங்களோ என பயமாயிருக்கு ...   




அப்பா ... என்ன யோசனை பலமாய் இருக்கு ....?


அட ..ஆமாப்பா .... எத்தனை முறை தான் அன்பு சகோதரிக்கும்கலைஞர் ஐயாவுக்கும் மாறி மாறி ஜால்ரா அடிப்பது .   மக்கள் வேற யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க .... மூணாவது அணி ஏதாவது வந்தால் தான் நாம பிழைச்சோம் ...







தம்பி ... இத்தனை நாள் தமிழன் தமிழன்னு சத்தம் போட்டேன்ஆனால் செந்தமிழன் பட்டம் உங்களுக்கு தான் கிடைத்திருக்கிறது ...


அண்ணே ... ஒண்ணுமில்ல .. சினிமாவில படம் எடுத்து பார்த்தேன் ஒன்னும் ஓடல ... ஆனா .. அதே படத்தை மக்கள் மத்தியில நானே ஒட்டி பார்த்தேன் ... பாருங்க அமோக வெற்றி .   ஆனா பாருங்க ....படம் எப்படியும் ஒரு நாள் முடியத்தான் வேணும் .





ஏம்பா ... யாரை பார்த்தாலும் நான் உளறு வாயன்னு சொல்லுறாங்க ..  என்ன செய்ய .. படத்தில தான் என்னாலே வேகமா பேசமுடியும் ..  சரி சரி .... சிவப்பு கண்ணை வெள்ளையா காண்பிக்கிற கண்ணாடி எதாவது இருந்தால் சொல்லுங்களேன்எப்படி தான் கூலிங்க்ளாஸ் போட்டாலும் கண்ணை பார்க்கிறாங்க .... ரொம்ப மோசம் ..!







சார் , தமிழ்நாட்டிலே நீங்க தலைவராய் இருந்து ஏன் செயல்பாடுகள் சரி இல்லை ..?

  யார் சொன்னது ...? தமிழ்நாட்டில் 7 கோடி உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சிக்கு சேர்த்திருக்கிறோம்ஆனால் என்னை தவிர யாரும் ஒட்டு போடவில்லைதீவிர ஆலோசனைக்கு பிறகு மேலிடத்திற்கு ரிப்போர்ட் கொடுப்பேன்





அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர பகைவனும் இல்லை .   வரும் சட்டமற்ற தேர்தலில் நாங்கள் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றுவோம் .  


Wednesday 9 November 2011

திரு . அப்துல் கலாமுக்கா இந்த வார்த்தைகள் .? - ஒரு வேதனை குமுறல்


கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள மக்கள் அச்சத்தின் காரணமாக சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் .  இந்த சூழ்நிலையில் இந்தியாவின் மிகச்சிறந்த விஞ்ஞானியும்  , முன்னாள் குடியரசு தலைவருமான திரு. அப்துல் கலாம் தன்னுடைய சொந்த விருப்பத்தின் பேரில் அணுமின் நிலையத்தை ஆய்வு செய்து " கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுக்காப்பானது " என்று அறிக்கை வெளியிட்டார் . 

இந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களில் பதிவுலகம் அவருக்கு கொடுத்த கொடுமையான் சில பட்டங்களை கண்டு மிகவும் அதிர்ந்து போன இந்திய குடிமக்களில் நானும் ஒருவன் .  வெகு சிலரே இந்த மாதிரி பதிவுகளை எதிர்த்தபோதிலும்  , அநேகர் அற்புதம் , அதிசயம் என்று அந்த பதிவுகளை பாராட்டியிருப்பது கொடுமையிலும் கொடுமை .


 ஒரு பதிவர்  எழுதியுள்ளார்  அப்துல் கலாம் ஒரு கோமாளி என்று .  அந்த பதிவர் பெரும் அறிவாளியாக தான் இருக்கமுடியும் .

1981 ல்   -  பத்ம பூசன்
1990 ல்  -   பத்ம விபூஷன்
1997 ல்  -  பாரத ரத்னா
2009 ல்   - அமெரிக்காவின் ஹூவர் மெடல்
இப்படி பல பதக்கங்களும் ,  விருதுகளும் அவரின் அறிவியல் அறிவுக்காக , அவர் ஆற்றிய தேசப்பணிக்காக கொடுக்கப்பட்டிருக்கிறதே  , அவரை பார்த்தா கோமாளி என்று சொல்லுகிறீர்கள் ...?


இன்னும் ஒரு பதிவர் சொல்லுகிறார் , "  இவரின் உபதொழில் கூலிக்கு மாரடிப்பது என்று "
இப்படி கேள்வி கேட்பவர் எந்த கூலிக்கு மாரடிப்பவர் என்று நானும் கேட்டால் அது மிகவும் அசிங்கம் .  வாங்குகிற சம்பளத்திற்கு ஒழுங்கா வேலை பார்க்காமல் அரசை ஏமாற்றி சம்பளம் வாங்கி கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் வாழ்கிற பதர்களுக்கு மத்தியில் நாட்டிற்காக உண்மையாய் உழைத்து  நாட்டின் பாதுகாப்பு துறையிலும் ( DRDO )  , விண்வெளி துறையிலும் ( ISRO ) பணியாற்றி இந்தியாவின் முதல் செயற்கை கோள் செலுத்தும் வாகனத்தின் ( SLV ) தலைவராய் விளங்கினாரே ,  அவரை பார்த்து நீங்கள் கேட்கிறீர்கள் " கூலிக்கு மாரடிப்பவர் என்று "


 இன்னும் ஒரு பதிவர் கருத்து சொல்லி உள்ளார் " ஜனாதிபதி போதை இவரை மாற்றிவிட்டது "
இந்தியாவின் குடியரசு தலைவர் மாளிகையை குழந்தைகளுக்காக திறந்து விட்ட தலைவர் என்று நாளேடுகள் செய்தி வெளியிட்ட போது நீங்கள் பார்க்கவில்லையா .....?   சாதாரண MLA அடிபொடிகளுடன் ரகளை பண்ணும் போது ,  முதல் குடிமகனாய் இருந்த போதும் எளிமையாய் இருந்தாரே , அவரை பார்த்து நீங்கள் கேட்கிறீர்கள் " ஜனாதிபதி போதை இவரை மாற்றிவிட்டது " என்று 


காரணம் இவர் கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று சொல்லி விட்டாராம் ..  அதனால் இவருக்கு அணு அறிவியலில் அறிவு இல்லையாம் ... 

ஏம்பா ...  அக்னி  மற்றும் ப்ரித்வி போன்ற ஏவுகணைகளை பறக்க விட்டு  ... உங்களை போல நாட்டின் மானத்தை பறக்க விடாமல் ,  தேசத்தின் பெருமையை நிலை நிறுத்தினாரே , அப்பொழுது ஏன் சொல்லவில்லை இவருக்கு அறிவு இல்லை என்று ...." 


 2020 ல் இந்தியா எல்லாவிதங்களிலும் தன்னிறைவு பெற்று உலகத்தில் முதல் இடத்திற்கு வரும் என்று  INDIA 2020 என்ற புத்தகத்தில் சொன்ன போது தேசமே அவரை கொண்டாடினதே அப்பொழுது நீங்கள் ஏன் சொல்லவில்லை இவருக்கு அறிவு இல்லை என்று 

 பொக்ரானில் அணு சோதனையை நடத்தின போது உலகமே இந்தியாவை வியப்பாய் நோக்கி பார்க்கும் போது அவரை எல்லாரும் பாராட்டினார்களே ,  அப்பொழுது ஏன் சொல்லவில்லை அவருக்கு அறிவு இல்லை என்று ...

Phd (Political சயின்ஸ்)  படித்தவர் தான் உங்கள் அணு விஞ்ஞானி போலவும் திரு , அப்துல் கலாம் ஒன்றும் அறியாதவர் போலவும் கதை விடும் நண்பர்களே ,  உங்களால் அவரை பாராட்ட முடியவில்லை என்றாலும் தயவு செய்து அவரை இகழாதீர்கள் ...

வானத்தை நோக்கி துப்புகிறவர்களின் ( உங்களின் ) முகத்தின் மேல் எச்சில் விழுவதை அறியாமல்  , இச்சகம் பேசும் நண்பர்களே  , எனக்கு கொஞ்சம் சந்தேகம் தான் " நீங்கள் இந்தியர்கள் தானா ...?" 

Sunday 6 November 2011

கூடங்குளம் அணு உலைகள் பாதுகாப்பானது - திரு . அப்துல் கலாம்


ரஷ்ய நாட்டு உதவியுடன் தமிழ்நாட்டின் கூடங்குளம் பகுதியில் 1000 MWe மின்சாரம் தயாரிக்கும் அணுமின் நிலையங்களின் கட்டுமான பணிகள் முடிந்து மின் உற்பத்தி துவங்கும் நிலையில் உள்ளது .   இந்த நிலையில் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்த அச்சம் பொது மக்கள் மத்தியில் நிலவுவதால் அணு மின் நிலையத்திற்கு எதிராக பொதுமக்கள் போராடி வருகிறார்கள் .   இந்த சூழ் நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்த அம்சங்களை ஆராய்வதற்காக விஞ்ஞானி அப்துல் கலாம் இன்று கூடங்குளம் வருகை தந்தார் .


 ஆய்வை முடித்த பின்பு நிருபர்களிடம் பேசிய திரு .  அப்துல் கலாம் அவர்கள் " கூடங்குளம் அணு மின் நிலையங்கள் உயர் தொழில் நுட்பத்தில் கட்டப்பட்டிருப்பதால் மிகவும் பாதுகாப்பானது " என்று தெரிவித்துள்ளார் .   கூடங்குளம் அணுமின் நிலையம் கட்டப்படுவது அந்த பகுதிக்கு கிடைத்த வரப்பிரசாதம் எனவும் அறிவித்துள்ளார் .  தேசத்தின் அத்தனை மனிதர்களாலும் மதிக்கப்படும் உன்னத விஞ்ஞானியான திரு, அப்துல் கலாம் இப்படி சொல்லி இருப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில் இந்த கருத்துகளை ஏற்று கொள்வதில்லை என போராட்ட குழுவினர் அறிவித்திருப்பது வேதனையான விஷயம் தான் 

இந்த சூழலில் போராட்ட குழு தலைவர் திரு. உதயகுமார் அவர்கள் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கும் போது சொன்ன சில காரியங்களை நினைத்தால் கொஞ்சம் சிரிப்பாக இருக்கிறது .
  1. திரு . அப்துல் கலாம் அவர்கள் அணு விஞ்ஞானி அல்ல அதனால் அவரின் கருத்துகள் ஏற்றுகொள்ள முடியாது என்றார். 
     உண்மை தான் .  திரு, அப்துல் கலாம் அவர்கள் ஏரோநாட்டிகல் பொறியாளர் தான் .  ஆனால் அணுசக்தி துறையிலும் அவரது பணிகள் இருந்தது என்பதை உலகம் அறியும் .   சரி .... திரு . உதயகுமார் அவர்களே ... நான் ஒரு கேள்வி கேட்கிறேன் .. உங்களை பார்த்து ....  நீங்கள் அணு விஞ்ஞானியா ...? அணுவை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ...?  அப்படியே அணு விஞ்ஞானிகள் சொன்ன கருத்துகள் கூட உங்களுக்கு ஆகாதே ....!
  2. USA ,  ஜப்பான்  , பிரான்ஸ் விஞ்ஞானிகளை விட இந்திய விஞ்ஞானிகள் பெரியவர்களா என்று கேட்டார் ...  
     திரு உதய குமார் அவர்களே .... ஆமா  நம்ம நாட்டு விஞ்ஞானிகள் பெரியவர்கள் தான் ....  நீங்கள் மேற்சொன்ன எந்த நாட்டு விஞ்ஞானியும் கண்டுபிடிக்காத உண்மையை நம்ம நாட்டு விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் தான் கண்டுபிடித்தது என்பதை மறந்து போக கூடாது
  3. மக்களாகிய எங்களை என் திரு . அப்துல் கலாம் சந்திக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார் .
     ஐயா .  நீங்கள் தானே அப்துல் கலாமை சந்திக்க விரும்பவில்லை என்று நாளேடுகளுக்கு பேட்டி கொடுத்தீர்கள் .  என்ன பிள்ளையை கில்லி விட்டு தொட்டிலை ஆட்டுகிறீர்களா...?


 இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானியான திரு . அப்துல் கலாமின் கருத்தை இவர்கள் என்று கொள்ளாதபோது யார் கருத்தை தான் ஏற்று  கொள்ளுவார்கள்.   பொறுத்திருந்து பார்ப்போம் .

Wednesday 2 November 2011

அரசியலுக்கு வர என்ன தகுதி - பொதுவான பார்வை


அரசியல் என்பது ஒரு பெரிய துறை .  ஆழம் தெரியாமல் அதில் காலை விடமுடியாது என்று தான் நான் நினைத்து கொண்டிருந்தேன் .   திடீரென்று இன்று காலை என் நண்பன் கேட்டான் "  அரசியல்வாதியாய் மாற என்ன தகுதி வேண்டும்? "   இந்த கேள்வி கொஞ்சம் என்னை அசைத்தபடியால் இதை குறித்து ஒரு கட்டுரை எழுத முற்பட்டேன் .  

 இன்னும் ஒரு நண்பனிடம் இதை குறித்து விவாதிக்கலாம் என்று அவனிடம் என் நண்பன் கேட்ட அதே  கேள்வியை கேட்டபோது , அவன் பொறுமையுடன் என்னை பார்த்து ஒரு சின்ன கதை சொன்னான் ....

பள்ளிகூடத்தில் நன்கு  படிக்கிற மாணவர்கள் முதல் பெஞ்சில் இருப்பார்கள் .  கொஞ்சம் நன்கு படிப்பவர்கள் நாடு வரிசையில் இருப்பார்கள் .  தேர்ச்சி பெறாத மாணவர்கள் எல்லாம் மாப்பிள்ளை பெஞ்ச் என்ற கடைசி பெஞ்சில் இருப்பார்கள் .

இதில் நன்கு படிப்பவர்கள் தங்கள் படிப்பு முடிந்த பிறகு மருத்துவர் அல்லது பொறியாளர் ஆகிறார்கள்

கொஞ்சம் நன்கு படிப்பவர்கள் ஒரு டிகிரி முடித்து விட்டு பிறகு MBA போன்ற மேலாண்மை படிப்புகள் முடித்து முதல் பிரிவினரை ஆளுகிறார்கள் .  

மாப்பிளை பெஞ்ச் மாணவர்கள் தோல்வி அடைந்த பிறகு ஒரு கட்சியில் சேர்ந்து MLA , MP ஆகி இரண்டாம் பிரிவையும் , முதல் பிரிவையும் ஆளுகிறார்கள் ..


இப்பொழுது புரிகிறதா .....?  என்று கேட்டான் ..

 ஓரளவுக்கு அவன் சொன்ன காரியங்கள் இன்றைக்கு அரசியலில் நடந்து கொண்டு தான் இருக்கிறது ?   எத்தனயோ புண்ணியவான்கள் இந்த அரசியலை புனிதமாக கருதி சேவை செய்த வாசனையான காலங்கள் போய் அரசியல் என்றால் சாக்கடை என்று சொல்ல கூடிய நிலையில் இன்று உள்ளது .  இன்றைய அரசியல் வாதியின் சில அடிப்படை தகுதிகளை பார்க்கும் போது நமக்கு கொஞ்சம் ஆச்சரியமாய் தான் உள்ளது
  1. குறைந்தது ஒரு கோடியாவது சொத்து இருக்கவேண்டும் ( தேர்தலில் போட்டி இடுவதற்கு ) .  இந்த முறை தேர்தலில் நான் சில பேரின் சொத்து மதிப்புகளை ( கட்சி பாகுபாடு இல்லாமல் ) பார்த்த போது தான் இந்த தகுதியை கண்டு கொண்டேன் .  இந்த பணத்தை கொண்டு பதவியை பிடிப்பதற்கு செலவு செய்து ( பாருங்கையா ....சேவை செய்வதற்கு பிறந்தவர்கள் ) வெற்றி பெற வேண்டும் .
  2. குறைந்தது 2 வழக்குகளாவது இருக்க வேண்டும் ( அடிதடி , ஊழல்  மற்றும் பிற ).  ஏன் எனில் ஜெயித்தபிறகு சட்டமன்றத்தில் /  நாடாளுமன்றத்தில் சண்டை போடுவதற்கு .
  3. கல்வி தகுதி என்று ஒன்றும் இல்லை ( மிக குறைந்த அளவில் நன்கு கற்றவர்கள் ஜெயிக்கிறார்கள் )
  4. ஆள்பலம் , சாதி பலம்
  5. இன்னும் பிற

என்னை பொறுத்த வரை அரசியலில் ஒருவர்  ஈடுபட வேண்டுமானால் அவர் கீழ்க்கண்ட தகுதி உடையவராய் இருக்க வேண்டும் என நினைக்கிறேன் .

  1. குறைந்தது ஏதாவது ஒரு துறையில் முதல் வகுப்பில்  நேரடி பட்டம் ( தொலை தூர கல்வியில் அல்ல ) பெற்று இருக்க வேண்டும் . ஒரு சாதாரண இளநிலை ஊழியனின் பதவிக்கு உள்ள தகுதி தான் இது  ( அரசியலில் சேர்ந்து பின் நான் எப்படியாவது Doctor பட்டம் வாங்கி விடுவேன் என்று சொல்லகூடாது .  ஏன் எனில் இப்பொழுது நிறைய Doctor அரசியலில் இருக்கிறார்கள் )
  2. கூடுதலாக ஆட்சிமுறை குறித்து 2  ஆண்டுகள் படித்திருக்க வேண்டும் .  இந்த வகுப்புகள் தாய் மொழியில் திறமைமிக்க கல்வி நிறுவனங்களால் நடத்தப்பட வேண்டும் .  Closed book system என்ற முறை உபயோகபடுதப்படாமல் Open book system என்ற முறையில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் .
  3. ஒருமுறை MLA ஆக இருந்தவர் மாத்திரம் MP பதவிக்கு போட்டியிட தகுதி செய்யப்பட வேண்டும் .
  4. ஒரு குற்றப்பத்திரிகை இருந்தால் கூட அந்த வழக்குகள் முடிந்த பிறகு தான் அரசியலில் ஈடுபட வேண்டும்
இதெல்லாம் நடக்குமா என்றால் ,  நடக்காது தான் .. ஆனால் நடந்தால் தான் அரசியல் சாக்கடை என்ற நிலையில் இருந்து பரிசுத்தமான சேவை நிலைக்கு கடந்து வரமுடியும் .

குறிப்பு :  சில நல்ல , தியாகம் உள்ள அரசியல்வாதிகளை கருத்தில் கொள்ளாமல் பொதுவான ஒரு கண்ணோட்டமே இது .   ஆகவே அரசியல் தூய்மை உள்ளவர்களுக்கு இந்த கட்டுரை பொருந்தாது .  நன்றி
 

Saturday 22 October 2011

அணு மின் நிலையங்கள் - சில கேள்விகள் - சில பதில்கள்


அணு மின் நிலையங்களை குறித்து செய்திகள் இப்பொழுது எங்கும் விவாதிக்கப்படுகிறது.   இது ஒரு நல்ல விஷயம் தான்.   விதண்டாவாதத்திற்கு சில பேர் சில கேள்விகளை கேட்கும் போது ,  உண்மையான பொது அக்கறையோடும் சில கேள்விகள் எழும்ப தான் செய்கிறது.   இந்த மாதிரியான ஆக்கப்பூர்வமான கேள்விகளுக்கு  பதில்கள் சொல்லப்படாத பட்சத்தில் ,  கேள்விகள் எந்த விதமான உணர்சிகளோடு கேட்கப்பட்டதோ  அதே உணர்சிகளை மக்களிடம் தவறாக சேர்க்கவும் வாய்ப்புண்டு.    எனவே தான் இந்த பதிவுலத்தின் மிக முக்கியமான (  நான் மிகவும் மதிக்கிற )  ஒரு பதிவரின் கேள்விகளுக்கு பதில் சொல்லவும் ,  அதன் மூலம் அணு மின் நிலையங்களை குறித்து நாம் அறிந்து கொள்ளவும் இந்த இடுகையை இட முயற்சி மேற்கொண்டேன் .    
 
 
இந்த கேள்விகள் அனைத்தும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை குறித்து மாண்புமிகு பிரதமரிடம் கேட்கப்பட்டுள்ளவையாக அந்த கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.   ஆனால்  ஒரு சாதாரண  குடிமகனாக இந்த கேள்விகளுக்கு பதில் கொடுக்க முற்பட்டுள்ளேன்.
 
கேள்வி :   When  Tsunami hit our Coast ?  ( எப்பொழுது சுனாமி நம்முடைய கடற்கரையை தாக்கும் ..? )
இந்த கேள்விக்கு சிறந்த பதில் கடவுளுக்கு மட்டும் தான் தெரியும் .   ஆனால் அப்படி சுனாமி தாக்கினாலும் ,  அது கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் பாதிக்கமுடியாது என்பதற்கு இதே வலைத்தளத்தில் நான் எழுதியுள்ள புகுஷிமாவும் கூடன்குளமும் ஒன்றா என்ற கட்டுரையில் சுனாமி என்ற கருத்தின் கீழ் காணலாம்  ( http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_20.html )
 
கேள்வி :  How Will an Earthquake miss Kudankulam ? ( பூகம்பம் எப்படி கூடங்குளத்தை தாக்காதிருக்கும் .? )
இந்த கேள்விக்கும் இதே வலைத்தளத்தில் நான் எழுதியுள்ள புகுஷிமாவும் கூடன்குளமும் ஒன்றா என்ற கட்டுரையில் பூகம்பம் என்ற தலைப்பின் கீழ் காணலாம்.  (   http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_20.html


கேள்வி :   Where will you Store your Radioactive Waste ?   &  How Long will you guard the Waste ?
இது ஒரு நல்ல கேள்வி .   பொதுவாக Radioactive Waste என்று வருகிற ப்ளுட்டோனியம் 239  மிக பத்திரமாக காரிய கொள்கலனில் (  காரியம் கதிர்வீச்சை வெளிவிடாது  என்று எங்கோ படித்த நியாபகம் வருகிறதா )  பாதுகாக்கப்பட்டு  , மிக சிறந்த Concrete கொள்கலனுக்குள் வைக்கப்பட்டு  பாதுகாக்கப்படும் .  அந்த Concrete கொள்கலனுக்குள் தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும்..    இந்த வசதிகள் எல்லாம் அணு மின்  உலைகளுக்குள்  தான் செய்யப்பட்டிருக்கும் .   இது பொதுவான முறை .
 
இரண்டாவது கேள்விக்கு ,  தயவுசெய்து  இதே  வலைதளத்தில்  பதியப்பட்ட  எனது  பதிவான்  " அணுக்கழிவு இந்தியாவின் நிலைப்பாடு "  என்ற கட்டுரையில்  காணலாமே ..  (  http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_15.html )  
 
 
கேள்வி :  How  will You Cool the Nuclear Core ?   &  Where will you keep the hot Water after cooling the Core ?   ( எப்படி அணு எரிகோலை குளிர்விப்பீர்கள் ?  அப்படி குளிர்விக்கப்பட்ட பின் தண்ணீரை கடலில் தானே கலக்கவிடுவீர்கள் ? )
இந்த கேள்வி மிக மிக முக்கியமான கேள்வி .  அநேகர் இப்படி தான் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.   நேரடியாக கடல் நீர் அணு உலைகளுக்குள் செலுத்தப்பட்டு பின் நேரடியாக கடலுக்குள் விடப்படும் எனவும் அதனால் கதிரியக்கம் கடலில் கலந்து விடும் என்றும் கருதுகிறார்கள்.  இது ஒரு தவறான கருத்து.   கொஞ்சம் இதை விளக்கமாக காண்போமே ..
 
 
 
மேற்கண்ட படத்தை ( அணு உலைகள செயல்படும் முறை )   நன்கு ஒரு விசை பாருங்கள் .     மூன்று சுற்றுகள் ( Three Circuits )  தெரிகிறதா ..?   
 
முதல் சுற்று :  அணு பிளவு நடக்கும் உலைக்கும் நீராவி உருவாக்கும் எந்திரத்திற்கும் ( Primary Circuit is between Reactor Pressure vesel & Steam Generator ) .    இந்த சுற்றில் கடல் நீர் பயன்படுத்தப்படாது .  மாறாக  சுத்திகரிக்கப்பட்ட நன்னீர் தான் பயன்படுத்தப்படும் .  நமக்கு தெரியும் நீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சிஸ் என்று சொல்லி.    ஆனால் இந்த முதல் சுற்றில் Pressurizer என்ற கருவி மிக அதிக அழுத்தத்தில் நீரை அழுத்துவதால் ,  முதல் சுற்றில் ( Primary Circuit )  நீரானது அணு மின் உலைக்குள் இருந்து வெப்பத்தை மாத்திரம் எடுத்து கொண்டு Steam Generator என்ற நீராவி உருவாக்கும் இயந்திரத்திற்கு வருகிறது..
 
இரண்டாம் சுற்று :   Steam Generator என்ற நீராவி இயந்திரத்தில் இருந்து Turbine என்ற விசையாழி வழியாக Condenser என்ற பகுதியை அடைந்து மறுபடி Steaam Generator யை அடைகிறது.   நன்கு கவனிக்கவும் முதல் சுற்றும் இரண்டாம் சுற்றும் ஒன்றுடன் ஓன்று கலவாது .  மறுபடி படம் பாருங்கள்.    இந்த இரண்டாம் சுற்றிலும் கடல் நீர் பயன்படுத்தபடாது .   இங்கும் நன்னீர்தான்.    இங்கு தான் நீராவி உற்பத்தி செய்யபடுகிறது.   இந்த இரண்டாம் சுற்றில் Pressurizer என்ற அழுத்த கருவி இல்லாததால் இங்கு நீர் 100 டிகிரி செல்சியஸ் அடைந்தவுடன் நீராவியாகிறது.  
 
இப்பொழுது உங்களுக்கு ஒரு நியாயமான கேள்வி வரலாம் ...  அதெப்படி இரண்டு சுற்றுகளும் ஒன்றோடு ஓன்று கலவாது என்று சொல்லுகிறீர்கள் .   எப்படி வெப்பம் இரண்டாம் சுற்றுக்கு மாற்றப்படும்  என்று .    அப்படி கேட்ப்பீர்கள் ஆனால் மிக சரியான கேள்வியை கேட்டீர்கள்.    வெப்பமானது முதல் சுற்றில் இருந்து இரண்டாம் சுற்றுக்கு Heat Exchanging ( வெப்ப பரிமாற்றம் )  என்ற முறையில் தான் மாற்றப்படுகிறது.   இன்னும் புரியவில்லையா ..?   ஒரு சின்ன உதாரணம் சொல்லுகிறேன் .   நான் சிறு பிள்ளையாய் இருக்கும் போது என்னுடைய சூடான பாலை ஆற்றுவதற்கு எனது அம்மா என்ன செய்வார்கள் தெரியுமா ..?   அந்த பாலை ஒரு பாத்திரத்தில் வைத்துகொண்டு அந்த பாத்திரத்தை வேறு தண்ணீரின் மேல் வைப்பார்கள்.   அப்பொழுது அந்த பாலின் வெப்பம் பரிமாற்றத்தின் மூலம் அந்த தண்ணீருக்கு மாற்றப்படும்  .
 
இப்பொழுது உங்களுக்கு விளங்கி இருக்கும் என நினைக்கிறேன்.   இரண்டு பொருட்களும் ஒன்றுடன் ஓன்று கலவாது ஆனால் ஒரு சுற்றில் உள்ள நீரின் வெப்பம் (  பாத்திரத்தின் பாலின் வெப்பம் )  இரண்டாம் சுற்றுக்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது.   
 
இப்படி இருக்கும் போது முதல் சுற்றில் இருக்கும் கதிர்வீச்சு எப்படி இரண்டாம் சுற்று நீருக்கு பரவ முடியும் ?   யோசித்து பாருங்கள் 
 
 
சரி தொடர்ந்து கவனிப்போம் .   இப்போது இந்த நீராவி Turbine  எனப்படும் விசையாழியில்  மோதும் போது அதனுடன் இணைக்கப்படிருக்கும் Rotor என்ற சுழலி சுற்றப்படுவதால் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.   சரி ... இந்த நீராவி Turbine ல் மோதும்போது என்ன ஆகும் என்று பார்த்தோமானால் ,  அந்த நீராவி குளிர்ந்து நீராய் மாறிவிடும் .  ( நம்முடைய பழைய காலத்து சமையல் அறையில் சாதம் பொங்கும்போது நீராவி வெளியேறும்.   அப்பொழுது நாம் அந்த பாத்திரத்தை மூடி கொண்டு மூடினால் ,  அந்த மூடியில் தண்ணீர் இருக்கும் .   அதே முறை தான் )  
 
மூன்றாம் சுற்று :    இந்த சுற்றில் தான் கடல் நீர் உள் வந்து Condenser என்ற பகுதி வரை வந்து செல்லுகிறது (  Condenser என்ற பகுதியில் குளிர்ந்த நீராவி அதாவது நீர் இருக்கும் )   இப்பொழுது படத்தை பாருங்கள் .  இந்த கடல் நீரும் இரண்டாம் சுற்றுடன் கலப்பதில்லை.  அப்படியெனில் ,  ஆமா  இந்த இடத்திலும் வெப்ப பரிமாற்றம் மாத்திரம் தான் நிகழும்.   அப்படியெனில் மிக குறைந்த வெப்பம் உள்ள கடல் நீர் தான் மறுபடி கடலுக்கு திரும்பும்.
 
இப்பொழுது கவனியுங்கள் ...   கடல் நீர் அணு உலைகளுக்குள் செல்லாது .   கடல் நீரில்  கதிரியக்கம் கிடையாது.    அதனால் கடல் நீரில் கதிரியக்கம் இருக்கும் என்ற கூற்று முற்றிலும் தவறானது என நாம்  விளங்கி  கொள்ள  முடியும். 
 
 
இன்னும் சில கேள்விகள் அந்த பதிவில் கேட்கப்பட்டுள்ளது ..  அவற்றுக்கான பதிலை அடுத்த இடுகையில் இடுகிறேன் .   ஏன் எனில் இவை அனைத்தும் தொழில் நுட்ப சந்தேகங்கள் ,  அவைகள் அனைத்தும் மேலாண்மை சந்தேகங்கள் .   அதனால் இரண்டு பதிவுகளாக இட்டால் சிறந்தது என்ற முடிவுக்கு வருகிறேன்.
 
மேற் கூறிய காரணங்களின் படி பார்க்கும் போது அணு மின் நிலையங்கள் பாதுகாப்பானது எனவும் அதினால் எந்த கதிரியக்க பாதிப்பும் கடல் வாழ் உயிரினங்களுக்கு நேராது எனவும் புலப்படுவதால் அணுமின் நிலையங்களை வரவேற்கும் நம்முடைய தயக்கங்களை அகற்றுவோம் ..    நன்றி

Thursday 20 October 2011

புகுஷிமாவும் கூடன்குளமும் ஒன்றா ? - ஒரு ஆய்வறிக்கை


புகுஷிமா அணு உலைகளுக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்ட வசமான நிகழ்வுகள் நாம் எல்லாரும் அறிந்ததே.   மிக கடும் பூகம்பத்தில் சிக்கி கொண்ட ஜப்பான் நாட்டில் அதை தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான சுனாமி தாக்குதல்களும் புகுஷிமா அணு உலைகளில்  பாதிப்பை ஏற்படுத்தியது.  உலகம் முழுவதும் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்ட இந்த நிகழ்வு சாதாரண மக்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியது.   இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக மக்கள் போராட துவங்கி உள்ளனர்.   பெரும்பாலானவர்களின் கேள்வி என்னவெனில் புகுஷிமாவை போன்ற விபத்து கூடங்குளத்தில் நிகழாது என்பதற்கு என்ன பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்பதே.
இது ஒரு நியாயமான கேள்வி என்பதாலும் ,  மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்திற்கு முடிவு காணவேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த கட்டுரை எழுத முற்பட்டேன்.   

புகுஷிமாவில் என்ன நடந்தது?  :  2011 ம் வருடம் மார்ச் மாதம் 11 ம் தேதி ஜப்பான் நாட்டை 9  ரிக்டர் அளவிலான மிகப் பெரிய பூகம்பம் தாக்கியது.    பூகம்பத்தை உணர்ந்தவுடன் புகுஷிமாவின் அணு உலைகளில் பொருத்தப்பட்டிருந்த கட்டுபடுத்தும் கழிகள் ( Control Rods )  தானாகவே இறங்கி அனுப்பிலவின் தொடர் வினையை நிறுத்திவிட்டன.   ஆனாலும் சிதைவு வெப்பம் என அழைக்கப்படும் Decay heat யை குளிர்விப்பத்ர்க்கான மின்சார பம்புகளை இயக்குவதற்கான மின்சாரம் தடைபட்டு விட்டது ( பூகம்பத்தினால் ) .   
இந்த மாதிரி தருணங்களில் மின்சார பம்புகளை இயக்குவதற்காக டீஸல் ஜெனரேட்டர் இருக்கும்.   ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இந்த டீஸல் ஜெனரேட்டர்  மற்றும் பாட்டரிகள் சுனாமியால் எழுந்த தண்ணீரினால் மூழ்கியதால் இயக்கமுடியாம்ல் போனது.   இந்த சூழ்நிலை காரணமாக Reactor Coolant pumps  செயல்படமுடியாமல் போனது.
இந்த சூழ்நிலையில் அதி சூடு நிறைந்த Zircaloy  உலோகத்துடன் நீராவி இடைப்பட்டு ஹைட்ரஜென் உருவாக ஆரம்பித்தது.   இந்த  Hydrogen அதிகமாக சேர்ந்து அணு உலை கட்டிடத்தில் இருந்து வெளியேறிவிட்டது .   ( நாம் தொலைகாட்சியில் பார்த்தோமே ,  அது இது தான் ).  ஏற்கெனவே உள்ளே இருந்த கதிரியக்க துகள்களும் அதனுடன் சேர்ந்து வெளியேறிவிட்டது.  
இந்த சம்பவத்தில் இருந்து இந்த விபத்து நடப்பதற்க்கான காரணிகளை வகைபடுத்துவோமே .
1 .  பூகம்பம்
2    சுனாமி
3    டீஸல் ஜெனரேட்டர் செயல் இழப்பு
4   எந்த மின்சாரமும் இல்லாமல் குளிர்விக்க செய்யும் பாதுகாப்பு முறை இல்லை.
5   அணு உலை கட்டிடத்திற்குள் உருவாகிய Hydrogen யை கவர்ந்து கொள்ளும் கருவிகள் இல்லை .
6   அணு எரி கோல்கள் உருகினால் அவற்றை பரவாமல் பாதுகாக்கும் கருவி இல்லை.
கூடங்குளம் அணுமின் நிலையம் எப்படி வேறுபட்டது ..?
பூகம்பம்  :  ஜப்பான் அடிக்கடி பூகம்பம் நடைபெறுகிற இடம் என்பது நம் எல்லாருக்கும் தெரியும்.   அங்கு 7  ரிக்டர் அளவிற்கு மேல் ஏற்ப்பட்டுள்ள பூகம்பத்தின் விபரங்களை நாம்  http://en.wikipedia.org/wiki/List_of_earthquakes_in_Japan   காணலாம்.  


ஆனால் கூடங்குளம் அணுமின் நிலையம் பூகம் அபாய பகுதி 2  ( மிக அரிதாக பூகம்பம் நிகழும் பகுதி )  என்ற வரையறைக்குள் உள்ளது.  எனவே பூகம்ப அபாயம் கூடங்குளத்திற்கு இல்லை எனலாம் .  இந்தியாவின் பூகம்ப நிலைகளை கீழே காணலாம் .  

சுனாமி :   சுனாமி என்ற வார்த்தையே ஜப்பானில் இருந்து தான் தோன்றியது என்பதை நாம் அறியாமல் இருக்க மாட்டோம்.  துறைமுக அலை என பெயரிடப்பட்ட இந்த சுனாமி பல மீட்டர் உயரத்திற்கு புகுஷிமாவில் வந்தது.  என் இதே போல ஒரு சுனாமி கூடங்குளத்தில் வர முடியாது என்பது அநேகரின் கேள்வி .   இது ஒரு நியாயமான கேள்வி தான்.
சுனாமி போன்ற பெரிய ஆழி பேரலைகளை உருவாக்க கூடிய இடம் tsunamigenic fault  என்று அழைக்கபடுகிறது.   இந்த இடத்தில உருவாகும் சுனாமியின் உயரம் அது பயணம் செய்யும் தொலைவை பொறுத்து மாறுபடுகிறது.   தொலைவு குறைவாக இருந்தால் அலைகளின் உயரம் அதிகமாகவும் ,  தொலைவு அதிகமாக இருந்தால் அலைகளின் உயரம் குறைவாகவும் இருக்கும்.   ஜப்பானில் இந்த சுனாமி உருவான Fault புகுஷிமாவில் இருந்து 130 கிமீ.  அதனால் ஏற்பட்ட சுனாமியின் உயரம் அதிகம். 
ஆனால் ,  கூடங்குளம் பகுதியில் சுனாமி உருவாகும் Fault 1300  மற்றும் 1500  கிமீ தூரத்தில் தான் உள்ளது.   அதாவது அதனால் உருவாகும் சுனாமி அலைகளின் உயரம் அதிகபட்சம் 2  முதல் 3  மீட்டர் உயரம் தான் வரமுடியும்.   தகவலுக்கு ( http://www.tsunamisociety.org/272Jaiswal.pdf
அதனால் தான் 9  மீட்டர் கடல் மட்டத்தில் இருந்து உயர்ந்திருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்ற கருது ஏற்றுகொள்ள கூடியதே.
 டீஸல் ஜெனரேட்டர் செயல்   :   புகுஷிமாவின் டீஸல் ஜெனரேட்டர் தாழ்வான பகுதியில் அமைக்கப்பட்டு இருந்ததால் அந்த ஜெனரேட்டர் தண்ணீருக்குள் மூழ்கி விட்டது.  ஆனால் கூடங்குளம் டீஸல் ஜெனரேட்டர்  9 . 3  மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் செயல் இழப்பு என்ற பேச்சு அர்த்தமற்றதாகி விடும். 
மாத்திரமல்ல கூடங்குளம் அணுமின் நிலையங்கள் ஒன்றுக்கு நான்கு டீஸல் ஜெனரேட்டர் கொண்டுள்ளபடியால் அதிகபட்ச பாதுகாப்பு உறுதி செய்யபடுகிறது .  ( நன்றி :   Facts on KKNPP )
எந்த மின்சாரமும் இல்லாமல் குளிர்விக்க செய்யும் பாதுகாப்பு முறை  :   இது ஒரு முக்கியமான பாதுகாப்பு முறை.   புகுஷிமாவில் இந்த முறை இல்லை .  அப்படியே 4  டீஸல் ஜெனரேட்டர்களும் செயல் இழந்தாலும் Passive heat removal system என்ற அதி நவீன பாதுகாப்பு அமைப்பின் படி கூடங்குளம் அணுமின் நிலையங்கள் அணு உலைகளின் வெப்பத்தை குளிர்விக்கும் ஆற்றல் உள்ளவை .  அதனால் புகுஷிமாவில் ஏற்பட்டது போல Decay Heat யை குளிர செய்ய முடியாத நிலை ஏற்படாது என்பது திண்ணம்.
அணு உலை கட்டிடத்திற்குள் உருவாகிய Hydrogen யை கவர்ந்து கொள்ளும் கருவிகள்  ;    Hydrogen யை கட்டுபடுத்த முடியாத காரணத்தினால் புகுஷிமாவின் அணு உலைகள் சேதத்திற்கு உள்ளானது என பார்த்தோம்.   அனால்  கூடங்குளம் அணுமின் நிலையங்களில் இந்த கருவிகள் ( Hydrogen recombiner )  ஏராளம் பொருத்தப்பட்டிருப்பதால் அவைகள் இந்த hydrogen உருவானாலும் அவற்றை நீராக மாற்றும் சக்தி கொண்டவை.
Core  Catcher :   கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முக்கியமான் பாதுகாப்பு அரண்களில் இதுவும் ஓன்று.   பொதுவாக அணு உலைகள் வெடிக்கும் என்ற கருத்துகள் தவறு.   மாறாக அவைகள் உருகிவிடும் என்ற கருத்துகளே சரி.   அப்படி எல்லா பாதுகாப்புகளும் செயல் இழந்து போனாலும் ,  உருகிய அணு எரி கோல்களை வெளியில் விடாமல் இந்த கொள்கலன் தனக்குள் வாங்கி கொள்ளும்.    இந்த செயல்பாடு புகுஷிமாவில் இல்லை என்பது குறிப்பிட தகுந்தது.
இப்படி பல பாதுகாப்பு அரண்களை கொண்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தை நாம் புகுஷிமாவின் அணு உலைகளுடன் ஒப்பிட்டு பயப்படுவது தேவை அற்றது என்பது எனது கருத்து .  இந்திய அணு மின் நிலையங்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தான் ( பல அடுக்கு ,  பல எண்ணிக்கைகள் )  நமது அணு மின் நிலையங்களை கட்டுவதற்கு கொஞ்சம் அதிகம் செலவாகிறது என்பது எனது கருத்து.    
இப்படி பல நவீன தொழில் நுடபங்களுடன் உருவாகி வரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை குறித்த தேவையல்லாத வீணான வதந்திகளையும் ,  அச்சத்தையும் உதறி தள்ளி விட்டு பசுமையான மின்சாரத்தை நாம் வரவேற்கலாமே ....!
 உங்கள் கருத்துகளை பகிரலாமே
குறிப்புகள்  :   The Upside Down  , written by  Mr . Jha
                             Facts of  KKNPP
                             World wide Web

Tuesday 18 October 2011

கதிரியக்கம் என்றால் என்ன - ஒரு அறிவியல் பார்வை

கதிரியக்கம் ( Radiation )  என்ற வார்த்தையை எல்லாரும் ஒரு பயத்துடனே பார்க்கிறார்கள்.   சில தினங்களுக்கு முன்பு நான் சில நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்த போது ,  எல்லாரும் கதிரியக்கம் என்ற Radiation யை குறித்து மிகவும் பயந்து பேசினார்கள்.   என்னுடைய முறை வந்தபோது நான் பொதுவாக அவர்களிடம் ஒரு கேள்வியை கேட்டேன் .
 
கதிரியக்கம் ( Radiation )  என்றால் என்ன என்று நினைக்கிறீர்கள் ?    அவர்கள் அளித்த பல பதில்களை பார்த்து நான் கொஞ்சம் வியந்துதான் போனேன்.  ஏன் எனில் ஒருவர் சொன்னார் Radiation என்பது விஷம் என்றார் ( அவர் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணி புரிகிறார்) .  இன்னும் ஒருவர் சொன்னார் Radiation என்பது ஒரு வாயு ( Gas ) , அது மக்களை கொல்லும் சக்தி படைத்தது என்று.    அன்று தீர்மானித்தேன் இந்த radiation என்ற கதிரியக்கத்தை குறித்து ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்று.   புரிந்து கொள்ளுவதற்கு கொஞ்சம் கடினமான பகுதி என்றாலும் , எளிதில் விளங்ககூடிய அளவில் இந்த கட்டுரையை எழுத நான் யாசிக்கிறேன்
 
 
Radiation  அல்லது கதிரியக்கம் என்றால் என்ன ?
இயற்பியலின் படி கதிரியக்கம் என்பது ஒரு ஊடகம் அல்லது பரந்த வெளியாக செல்லும் ஆற்றல் அல்லது அலைகள் அல்லது சக்திமிகுந்த சிறு துகள்கள் என்று வரையறுக்கபடுகிறது.
 
இந்த கதிரியக்கம் அயனியாக்க  ( Ionizing )  மற்றும் அயனியாக்கம் அல்லாத ( Non Ionizin ) என்று இரு வகைப்படும்.
 
இதில் அயனியாக்க கதிரியக்கம் ( Ionizing  Radiation )  என்பதை குறித்த அச்சமே நிலவுவதால் அதை குறித்தே இந்த கட்டுரையில் எழுத அதிகம் கவனம் கொண்டுள்ளேன்.   இந்த வகையில் கீழ்க்கண்ட கதிரியக்கங்கள் வருகிறது...
1 .   ஆல்பா கதிர்கள்  ( Alpha Rays )
2     பீட்டா  கதிர்கள்  ( Beta Rays )
3     காமா கதிர்கள் ( Gamma Rays )
4     நியூட்ரான்  கதிர்கள் ( Neutraan Rays )
5     X  கதிர்கள்   ( X  Rays  )
6     காஸ்மிக் கதிர்கள் ( Cosmic Rays )
 
இந்த கதிர்கள் ஊடுருவி செல்லும் சக்தி படைத்ததால் மனுக்குலத்திற்கு தீங்கு விளைவிக்கவும் இவைகளால் முடியும் என்ற என் கருத்தை நண்பர்கள் ஏற்று கொண்டவுடன் என்னை பார்த்து கேட்ட கேள்வி என்ன தெரியுமா ? 
அதனால் தான் சொல்லுகிறோம் அணு மின் நிலையங்கள் வேண்டாம் என்று  .   
நான் அவர்களிடம் கேட்டேன் கதிர்வீச்சின் பிறப்பிடமே அணுமின் நிலையங்கள் தான் என்று நினைக்கிறீர்களா ?
உடனே கோரசாக பதில் வந்தது " ஆம் என்று "
 
இந்த கதிரியக்கங்கள் பெருமளவு இயற்கையாகவும் ,  கொஞ்சம் செயற்கையில் இருந்தும் மனிதனுக்கு கிடைக்கிறது.   என்ற என் பதிலுக்கு ஒரு சேர வியப்பும் ,  எதிர்ப்புகளும் எழும்பியதால் இன்னும் கொஞ்சம் விளக்க ஆரம்பித்தேன்.
 
Radiation அல்லது கதிரியக்கம் என்பது  சிவேர்ட் ( Sievert ) என்ற அலகினால் அளக்கப்படுகிறது.   அதனுடைய பழைய அளவு ரெம் ( Rem ) என்ற அலகினால் அளக்கப்பட்டது.   இந்த அலகுகளின் மாற்றம் குறித்து கீழே காணுங்கள்
 
1  ரெம் (Rem)                     =   0 .01   சிவேர்ட்                   =      10  மில்லி சிவேர்ட்
1 எம்ரெம் (mrem )           =   0 .01  மில்லி  சிவேர்ட்   =      10   மைக்ரோ சிவேர்ட்
1  சிவேர்ட்                         =   100  ரெம்
1  மில்லி சிவேர்ட்        =   100  mrem                              =     0.1  ரெம்
1  மைக்ரோ சிவேர்ட் =  0.1  mrem
 (நன்றி :  http://en.wikipedia.org/wiki/Sievert )
 
மனிதன் பெறுகின்ற கதிரியக்கத்தில் பெருமளவு , அதாவது 81 % இயற்கையில் இருந்து பெறுகிறான்.   அந்த 81 சதவீதம் இப்படி பிரிக்க படுகிறது.   இயற்கையாக பூமியின் வளிமண்டலத்தில் நிறைந்துள்ள ராடான் 55 % ,   இயற்கையாக கடல் , மண்  , தாது பொருட்கள் இவற்றில் இருந்து 15  சதவீதம் மற்றும்  இயற்கையாக மனிதன் உடலுக்குள் ( Tritium  , Carbon - 14  , மற்றும் பொட்டாசியம் - 40  )  11  சதவீதம் .  இது அநேகம் பேருக்கு ஆச்சரியமாக தான் இருக்கும் என்பதி சந்தேகம் இல்லை . 
 
 
 
மீதம் 19  சதவீத கதிரியக்கத்தை மனிதன் செயற்கை மூலமாக பெறுகிறான் .  அதாவது மருத்துவ சேவைகளினால் 15  சதவீதமும் ,  நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களினால் ( டிவி , கம்ப்யூட்டர் , மற்றும் பல )  3  சதவீதமும்  , மீதம் 1  சதவீதம்  அணு மின் நிலையங்கள்  , ஆகாய விமான பிரயாணங்கள் போன்றவற்றின் மூலம் கிடைக்கிறது என்பது நமது எண்ணங்களை எல்லாம் தவிடு பொடியாக்குகிறது அல்லவா .?
 
 
இப்பொழுது யாரோ ஒருவர் கேட்கிறார்கள் மருத்துவ துரையின் மூலமாக கதிரியக்கம் நமக்கு கிடைக்குமா ..?  எப்படி இதை நம்ப முடியும் என்று ..?   நம்புங்கள் .. சில ஆதாரங்களை தருகிறேன் ..
மார்பக எக்ஸ்ரே    (  14   x   17   இன்ச் )                  =    15  mrem
பல் எக்ஸ்ரே  ( 3  இன்ச் சுற்றளவு )                      =    300 mrem
முதுகு தண்டு எக்ஸ்ரே ( 14   x   17   இன்ச் )     =    300 mrem
thyroid uptake study                                                             =   28000  mrem
Thyroid  Oblation                                                                  =   18000000  mrem
ஒரு நாளைக்கு நீங்கள் 20  சிகரெட் புகைப்பீர்கள் ஆனால் 280 mrem  /  day கதிரியக்கத்தை நீங்கள் பெறுகிறீர்கள் என்றபொழுது அநேகரின் முகத்தில் ஈயாடவில்லை. 
 
ஒரு முறை 30000  அடி உயரத்தில் பறக்கும் ஒருவர் , தன் ஆயுள் காலம் முழுவதும் அணுமின் நிலையத்தில் வேலைபார்க்கும் ஒரு தொழிலாளியை விட கதிரியக்கத்தை அதிகமாக பெறுகிறார் ( நன்றி  : The Upside Down , Book of Nuclear Power  , Page No : 148  , Written by . Mr  Jha )
 
நாம் எல்லாரும் கையில் வைத்திருக்கும் அலைபேசிகளின் கதிரியக்கமும் ,  அவற்றிக்கு பயன்படும் அலைபேசி கோபுரங்களும் கதிரியக்கத்தை தாராளமாக நமக்கு தருகின்றன ( கொஞ்சம் http://www.ciol.com/Networking/News-Reports/Mobile-tower-radiation-fear-grips-Delhi/137567/0/ படியுங்களேன் )
 
முடிவுரை :   இன்னும் இவைகளை குறித்து எழுத வேண்டுமெனில் ஏராளம் இருக்கிறது  ,  ஆனாலும் 99  சதவீத கதிரியக்கத்தை நாம் தாராளமாக ஏற்று கொண்டு உள்ளோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம் என்றபோது என் நண்பர்கள் புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக தலைகளை அசைத்தார்கள்.  
 
உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஆக்கப்பூர்வமான் கேள்விகளை தொடுக்கலாமே ..   நாம் விவாதிப்போம் ...  நன்றி