கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடி கொண்டு இருக்கும் அன்பார்ந்த கூடங்குளம் பகுதி தாய்மார்களே , தந்தைமார்களே , சகோதர , சகோதரிகளே , தற்சமயம் நடந்து கொண்டிருக்கும் சில நிகழ்வுகளை பார்க்கும் போது , உங்களுடன் மனம் திறந்து சில காரியங்களை பேச வேண்டும் என்று நான் நினைத்ததின் விளைவே இந்த பதிவு .
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் சோதனை ஓட்டத்தின் பொழுது ஏற்ப்பட்ட சில சத்தங்களை கேட்டு தான் , அணுமின் நிலையம் ஆபத்தானது என்று நீங்கள் பயந்து போராட்டத்தை தொடங்கினதாக நான் நாளேடுகளில் , பதிவுகளில் வாசித்து அறிந்து கொண்டேன். தொடர்ந்து நிகழ இருந்த பாதுகாப்பு ஒத்திகை முயற்சியும் , உங்களின் அச்சத்தை அதிகமாக்கிற்று என்ற உண்மையை நானும் அறிந்து கொண்டேன். இந்த நிலையில் உயிருக்கும் , உங்களின் உடமைக்கும் எங்கே பாதுகாப்பு இருக்காதோ என்று நீங்கள் பயப்பட்டது ஒரு நியாயமான அச்சமே என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன் . ஆனால் அணுமின் நிலையங்கள் குறித்த உண்மைகளை நீங்கள் அறிந்து கொள்ளும் பொழுது உங்கள் அச்சம் களையப்பட்டு விடும் என்பதில் அசையா நம்பிக்கையும் கொண்டிருந்தேன் . இந்த நிலையில் தான் திரு . உதயகுமார் தலைமையில் ஒரு குழுவினர் உங்களுடன் போராட்டத்தில் தங்களை இணைத்து கொண்டனர் .
உங்களின் அச்ச உணர்வுகளை தங்களுக்கு சாதகமாக்கி கொண்ட அவர்கள் அணுமின் நிலையம் செயல்பட்டால் உங்கள் ஊர் காலி செய்யப்படும் என்றும் , இடிந்த கரை என்ற கடற்க்கரை கிராமத்தின் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும் என்றும் உங்களுடன் தொடர்ந்து பேசி வந்ததினால் , உங்கள் அச்ச உணர்வு மேலோங்கி அவருடன் இணைந்து போராடுவதோடு மட்டும் அல்லாமல் அவரை உங்கள் தலைவராகவும் என்று கொண்டீர்கள் .
ஆனால் எந்த ஊரும் காலி செய்யப்படாது என்பதை அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் உறுதியாக சொல்லிய பொழுதும் , கடலில் மீன்பிடி தொழிலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அறிவிப்பு வெளிப்பட்ட பொழுதும் , உங்கள் பயத்தை அதிகமாக்கும் வகையில் கூடங்குளம் அணுமின் நிலையம் கடல் மண்ணால் கட்டப்பட்டது என்று ஒரு நவீன உத்தியை திரு. உதயகுமார் கைக்கொண்டதின் விளைவு உங்கள் அச்சம் அதிகமாயிற்று .
அணுமின் நிலையத்தின் கட்டுமானம் குறித்த சந்தேகங்கள் உரிய முறையில் அதிகாரிகளால் விளக்கப்பட்ட பொழுதும் , கிட்டதட்ட 6000 டன் உபகரணங்களை அணுமின் நிலையம் சுமந்து கொண்டிருக்கிறது என்ற தகவலை நீங்கள் அறிந்து கொண்ட பொழுது , கடல் மண்ணால் அணுமின் நிலையம் கட்டப்பட வில்லை என்பதை நீங்கள் விளங்கி கொள்ள தொடங்கின பொழுது , அணுமின் நிலையத்தை ஏன் கேரளாவில் நிறுவவில்லை ..? ஏன் பார்லிமென்ட் அருகில் நிறுவவில்லை ...? ஏன் ஜனாதிபதி மாளிகையில் நிறுவவில்லை என்று திரு . உதயகுமார் உங்களை கேள்வி கேட்டு பயம் உங்களை விட்டு அகலாதபடிக்கு பார்த்துகொண்டார் ... இப்படி ஒரு கேள்வியை திரு. அப்துல் கலாம் அவர்களின் உதவியாளர் அவர்களிடம் கேட்டு வாங்கியும் கட்டி கொண்டார் என்பதை நீங்கள் அறிந்து உள்ளீர்கள் .
எனவே பூகம்பம் வரும் , சுனாமி வரும் , கான்செர் வரும் . எரிமலை வரும் , அணுகுண்டுகள் வெடிக்கும் என்றெல்லாம் புதிய புதிய கதைகளை உங்களிடம் அளந்து விட்ட திரு. உதயகுமார் சோமாலியாவில் உள்ள குழந்தைகளின் புகைப்படத்தை உங்கள் முன்னாள் பேனரில் வைத்து உங்களின் குழந்தைகளும் இது போல மாறும் என்று சொல்லி உங்கள் பாதி நீங்க விடாமல் பார்த்து கொண்டார் ...
இந்த நிலையில் உங்களின் அச்சத்தை தீர்ப்பதற்காக மத்திய அரசாங்கம் குழு ஒன்றை அமைத்தது . இந்த குழுவிடம் 50 கேள்விகளை நாங்கள் கேட்போம் என்றும் அதற்கு அந்த குழுவினர் அளிக்கும் பதில்களை தமிழ் , மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் அச்சடித்து மக்களிடம் கொடுத்து அவர்களின் கருத்தை கேட்போம் என்று சொல்லியவுடன் அவரை நீங்கள் தலைவராகவே ஏற்று கொண்டீர்கள் . ஆனால் உங்கள் தலைவரோ நீங்கள் எதை நினைத்து பயபட்டீர்களோ அந்த கேள்விகள் ஒன்றையும் கேட்காமல் , இந்திய பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் ஊறி விளைவிக்கும் கேள்விகளை கேட்டார் . சரி. எங்கே அந்த கேள்விகளும் , பதில்களும் மக்களுக்கு கொடுக்கப்பட்டால் உங்கள் சந்தேகம் தீர்ந்து விடுமோ என்ற பயத்தில் , அந்த கேள்விகளை உங்களிடம் அளிக்காமலே , பேச்சு வார்த்தையை முடித்து கொண்டார் ..
இனி மேலும் நீங்கள் பொறுத்து கொள்ளமாட்டீர்கள் என்று உணர்ந்த திரு. உதயகுமார் கடைசி கட்ட பேச்சு வார்த்தையில் அழகாக ஒரு நாடகம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆடி உங்களின் உணர்சிகளை எழுப்பி விட்டு போராட வைத்தார் . இந்த நிலையில் மக்களின் அரசான தமிழக அரசு ஒரு வல்லுநர் குழுவை அமைத்தது ....
இந்த குழுவின் வல்லுனர்கள் தங்களின் ஆராய்ச்சியின் படி அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று அறிக்கைவிட்ட பிறகு திரு . உதயகுமார் சொல்லுகிறார் , " எங்களுக்கு அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்த விளக்கம் ஒன்றும் தேவை இல்லை .. எங்களுக்கு அணுமின் நிலையம் என்ற ஒன்றே வேண்டாம் " என்று ...
கூடங்குளம் நண்பர்களே , உங்களின் அச்ச உணர்வை தனக்கு சாதகமாக்கி கொண்ட திரு . உதயகுமார் , தேசத்தின் வளர்ச்சிக்கு எதிரான போராட்டத்தில் உங்களை அறியாமலே உங்களை பலி கடா ஆக்கி வருகிறார் .... இல்லை என்றால் இந்திய - ருசிய ஒப்பந்தம் , அணு எரி கோல்கள் பாதுக்காக்கப்படும் இடம் , அணுமின் நிலையத்தை சுற்றிலும் உள்ள பாதுகாப்பு படையினர் குறித்த விவரம் , ருச்சிய அரசுடன் செய்துள்ள கடன் ஒப்பந்த விவரம் போன்ற தகவல்களை ஏன் கேட்கவேண்டும் ....? இதையும் நீங்கள் அதி சீக்கிரத்தில் உணர்ந்து கொள்ளுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது ...
எனவே , நமது தேசத்தின் தலை சிறந்த அறிஞரகள் அணுமின் நிலயம் பாதுகாப்பானது என்று சொல்லும் வார்த்தைகளை கேட்காமல் , சில நக்சல் பாடல்களின் மூலம் உங்களையும் , உங்கள் பிள்ளைகளையும் போராட வைத்து , கூடங்குளம் என்ற ஊர் வளமான சமுதாயம் ஆகவிடாமல் தடுக்கும் திரு . உதயகுமாரை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளுங்கள் . நாட்டின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு தடையாகும் கற்களை உங்களை விட்டு விலக்குங்கள். வஞ்சகத்தை அடையாளம் கண்டு உங்களை விட்டு விரட்டுங்கள் . ஒளிமயமான தேசத்தை உருவாக்குங்கள் . வந்தே மாதரம் ....