Tuesday, 20 March 2012

திரு . உதயகுமாரை மக்கள் நம்பியது எப்படி ...? - கூடங்குளம் தகவல்


கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது .  இந்த போராட்டத்தை முன் நின்று நடத்திய திரு . உதயகுமார் பல பல புதிய புதிய காரணங்களை சொல்லி மக்களை போராட தூண்டி கொண்டே தான் இருந்தார் என்பதை எனது பதிவுகளில் பலமுறை எழுதி இருக்கிறேன் .  சரி ....  எங்கே தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்று போராடிய அப்பாவி மக்கள் எப்படி திரு . உதயகுமாரை இந்த அளவுக்கு நம்பினார்கள் என்ற கேள்வி எழாமல் இருக்கவில்லை தானே ....


 பதிவுலகில் கூட சில பதிவர்கள் , திரு உதயகுமாரை குறித்து பதிவு எழுதுகையில் காமராஜருக்கு ஒப்பிட்டு எழுதினார்கள் .  இவர்கள் காமராஜரை குறித்து என்னத்தை தான் அறிந்திருந்தார்களோ தெரியவில்லை .  இன்னும் ஒருவர் ஒருபடி மேலே போய் இவர் இயேசு , புத்தர் வரிசையில் வந்தவர் என்று ஒரு கவிதை எழுதிவிட்டார் .  எல்லாம் தலைவிதி ...!  சரி ....உண்மையில் இந்த திரு . உதயகுமாரை மக்கள் அப்படியே நம்பிவிட காரணம் தான் என்ன என்று யோசித்ததின் விளைவு தான் இந்த பதிவு 




கூடங்குளத்தில் தற்பொழுது நடக்கிற நிகழ்வுகள் ஆரம்பித்த சூழலை பார்த்தால் கொஞ்சம் வியப்பாக தான் இருக்கும் .   உள்ளாட்சி தேர்தலை ஒட்டி , கூடங்குளத்தில் ஏற்கனவே இருந்த பஞ்சாயத்து தலைவர் அணுமின் நிலையத்திற்கு ஆதரவானவர் என்பதால் , அந்த பஞ்சாயத்து தலைவரை தோற்க்கடிக்க வேண்டி மக்களை ஓன்று திரட்டும் பணியில் இந்த போராட்டம் துவங்கப்பட்டது என்பது தான் உண்மை என்று நான் கடந்தமுறை கூடங்குளம் சென்ற பொழுது அறிந்து கொண்டேன்.   


இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு மக்கள் மத்தியில் அவ்வளவு ஆதரவு கிடைக்காத நிலையில் , கூடங்குளத்தை சேர்ந்த ஒரு சிலரால் திரு . உதயகுமார் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்பட்டு இருக்கிறார் .  திரு ,. உதயகுமார் கூடங்குளம் வந்ததுமே அவர் எடுத்த ஒரு பெரிய முடிவு என்னவெனில் போராட்டம் கூடங்குளத்தில் இருந்து இடிந்தகரை பகுதிக்கு மாற்றப்பட்டது .  ஏன் எனில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சோதனை ஓட்டத்தின் போது எழுந்த சத்தம இடிந்தகரை மக்களை பயமுறுத்தி வைத்து இருந்தது .


மீனவ நண்பர்கள் சூழ்ந்து இருந்த இந்த கிராமத்தில் போராட்டம் நடத்துவதற்கு ஆலய வளாகத்தை தேர்ந்து எடுத்த இவர் முதல் முதலில் செய்த வேலை என்னவெனில் சோமாலியாவில் உள்ள குழந்தைகளின் சில படங்களையும் ,  மூளை வளர்ச்சி இல்லாத சில குழந்தைகளின் படங்களையும் பேனராக தயாரித்து மக்கள் முன்பு வைத்து மக்களை பயப்பட வைத்தார் .  தொடர்ந்து மீன் கிடைக்காது , கான்சர் வரும் , கதிரியக்கம் வரும் , கரு சிதைவு உண்டாகும் , உங்கள் ஊரை விட்டு விரட்டி விடுவார்கள் என்று சொல்லி மக்களை குறிப்பாக பெண்களை பயத்தில் ஆழ்த்தி போராட்டத்தில் ஈடுபட வைத்தார் .



உடனடியாக மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு அரசினால் , அணுமின் நிலையத்தின் அறிவியல் அறிஞர்களினால் கொடுக்கப்பட ஆரம்பிக்கப்பட்டது .  இந்த திட்டம் மக்கள் மத்தியில் கொஞ்சம் விழிப்புணர்வு ஏற்ப்படுதவே ,  உடனடியாக திரு . உதயகுமார் தனது அடுத்த கட்ட திட்டத்தை செயல்படுத்த தொடங்கினார்  .  அது தான் சாகும் வரை உண்ணாவிரதம் .   கிட்டத்தட்ட 127 பேர் அந்த உண்ணாவிரதத்தில் இருந்த பொழுது , திரு . உதயகுமார் மாத்திரம் உண்டு போராட்டத்தில் இருந்தார் என்பது உலகம் அறிந்த உண்மை .   அப்பொழுது தான் உதயமாகியது புதிய தலைமுறை என்ற தொலைகாட்சி .   அந்த தொலைக்காட்சியை யாரும் பார்க்காத நேரத்தில் , நேரடி ஒளிபரப்பை இடிந்தகரையில் இருந்து செய்தது .  அந்த தொலைக்காட்சியில் திரு . உதயகுமார் மாத்திரம் தான் பேசுவார் .   நன்கு மக்கள் ரசிக்கும் படி பேசினார் .  அணுமின் நிலையத்தை பார்லிமென்ட் மத்தியில் வைத்தால் என்ன என்பது போன்ற வாசகங்கள் அதில் இடம் பெற்றது.



இந்த நிலையில் சாகும் வரை உண்ணாவிரதம் 11 வது நாளை அடைந்தது .  பல தமிழக தலைவர்களும்  போராட்ட பந்தலுக்கு வந்தார்கள் ( ஒட்டு கிடைக்குமே ...)  127 பேரில் பலர் சாப்பிட்டு கொண்டு உண்ணாவிரதம் இருக்க , சிலர் மாத்திரம் உண்மையாக உண்ணாவிரதம் இருந்தார்கள் .  அந்த உண்மையான சிலரின் நலனுக்காக , மக்களின் நலனுக்காக தமிழக அரசு உண்ணாவிரதம் கைவிடும் படி அழைப்பு கொடுத்தது .  அதை ஏற்காத போராட்ட குழு " அணுமின் நிலையத்தை மூடுவதற்கு தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றினால் "  போராட்டத்தை கைவிடுவதாக கூறியது .  திரு . உதய்குமாருக்காக அல்ல ,  மக்களுக்காக தமிழக அரசும் , " மக்களின் அச்சம் நீங்கும் வரை ,  தற்காலிகமாக அணுமின் நிலையத்தின் பணிகள் நிறுத்தப்பட வேண்டும் "  தீர்மானம் நிறைவேற்றியது .    இது உதயகுமாரின் சாதுர்யத்தால் கிடைத்தது என்று மக்கள் எண்ண தொடங்கினர் .


  தொடர்ந்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும் , மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களையும் திரு . உதயகுமார் தலைமையில் குழுவினர் சந்தித்தனர் . எனவே திரு . உதயகுமார் நினைத்தால் எதுவும் நடக்கும் என்று அப்பாவி மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர் 


தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களில் எல்லாம் திரு . உதயகுமார் அழைத்து கொண்டு வரும் நக்சல் கும்பலை சேர்ந்த குழுவினர் பாடல்கள் , நாடகங்கள் மூலமாக , மக்களின் உணர்வுகளை போராட்டத்தில் தீவிரப்படுத்த  ஆரம்பித்தனர் .  குழந்தைகளும் அவர்களின் பார்வையில் தப்பவில்லை .


ஒவ்வொரு முறையும் தவறான கருத்துகளை கூறும் திரு . உதயகுமார் இப்படி தான் ( மக்களின் நம்பிக்கையால் )  ஒவ்வொரு அறிவியல் அறிஞர்களையும் முட்டாள் என்று சொல்லி கொண்டு இருந்தார் .   இவர் ஒரு பெரிய சமூக சீரழிவுக்கு மக்களை கொண்டு செல்லுகிறார் என்பதை நான் பல பதிவுகளில் சுட்டி காண்பித்து உள்ளேன்.


  பெண்களையும் , குழந்தைகளையும் போராட்டத்தில் ஈடுபடுத்தி எப்பொழுதும் அந்த அரணுக்குள் தன்னை ஒளித்து கொள்ளுபவர் .  இப்பொழுது கூட அப்படி தான் என்பது தான் உண்மை .


 இவரின் அதனை அசைவுகளையும் தீவிரமாக கவனித்த அரசுகள் , இவர்களுக்கு உண்மையில் அணுமின் நிலையத்தை குறித்த அச்சம் இல்லை . இவர்கள் அச்சம் நீங்காத அளவுக்கு திரு . உதயகுமார் என்பவரால் மூளைசலவை செய்யப்பட்டு உள்ளனர் என்பதை கண்டுபிடிததின் விளைவு தான் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்குவதற்கு அரசு ஆதரவு கொடுத்தது என்று சொல்லுகிறார்கள்.


 போராட்ட குழுவை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் .  ஆனால் அவர்கள் மக்களை திட்டமிட்டு போராட தூண்டிய திரு . உதயகுமார் , திரு . முகிலன் போன்றவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை ..   திரு . உதயகுமார் சரண் அடைவதற்கு அரசு அழைப்பு கொடுத்தபிறகும் . திரு உதயகுமார் மக்களின் பின்னால் ஒளிந்து கொண்டு தான் இருக்கிறார்.  இந்த நிலையில் காவல் துறை மீது கல்வீச்சு நடத்த பட்டது என செய்திகள் வெளியாகி உள்ளது .   



எனது பதிவுகளில் அடிக்கடி நான் சொல்லுகிற படி , திரு . உதயகுமாரின் போலி முகமூடி என்று கிழிந்துள்ளது .   அப்பாவி மக்களின் பின்னால் இருந்து கொண்டு அந்த மக்களின் அன்பையும் , அறியாமையும் திரு. உதயகுமார் தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்தால் , சட்டம் மன்னித்தாலும் , சமூகம் அவரை மன்னிக்காது .  போராடுபவர்களை விட போராட தூண்டியவர்கள் பெரும் தண்டனைக்கு உரியவர்கள் .  எனவே திரு. உதயகுமாரின் மீதும் , அவரது நக்சல் கூட்டத்தின் மேலும்  சட்டம் தனது கடமையை செய்யவேண்டும் . ஆனால் அதே நேரத்தில் அவரால் ஏமாற்றப்பட்ட அப்பாவி மக்கள் உண்மையை அறிந்து கொள்ளவேண்டும் என்பதே இந்த இந்தியனின் ஆசை . 


Monday, 19 March 2012

முற்று பெறும் கூடங்குளம் பிரச்சினை - வெற்றி பெற்றது யார் ...?


அதிநவீன் தொழில் நுட்பத்துடன் கூடங்குளம் பகுதியில் ரசியா நாட்டு உதவியுடன் 2000 MWe மின்சாரம் தயாரிக்கும் அணுமின் நிலையம் கட்டப்பட்டு வருகிறது .  இந்த அணுமின் நிலையத்தை செயல்படுத்த கூடாது என்ற கோஷத்துடன் கடந்த 6 மாதங்களாக போராட்டம் நடத்தப்பட்டு வந்தது நாம் எல்லாரும் அறிந்ததே .   இந்த போராட்டத்தை முன் நின்று நடத்தும் திரு, உதயகுமார் மக்களின் நியாயமான சந்தேகங்களுக்கு விடை காண முயற்சிக்காமல் ,  பொய்யான தகவல்களை சொல்லி மக்களை குழப்பி வந்ததை இந்த வலைப்பூவில் பலமுறை நான் எழுதியுள்ளேன் .  


மக்களின் அச்சத்தை தீர்க்க மத்திய மாநில அரசுகள் வல்லுனர்கள் அடங்கிய குழு ஒன்றை தனி தனியாக கூடங்குளம் பகுதிக்கு அனுப்பி , அணுமின் நிலையத்தை ஆய்வு செய்தது .  வல்லுனர்கள் குழு கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆய்வு செய்து , " கூடங்குளம் அணுமின் நிலையம் அனைத்து வழிகளிலும் பாதுகாப்பானது " என்று அறிக்கை அளித்தது .


இந்த நிலையில் , கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் தமிழக அரசு இன்று முக்கிய முடிவு எடுத்துள்ளது .   வல்லுநர் குழுவை பரிசீலித்த தமிழக அரசு , " கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக செயல்படுத்தலாம் " என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளது .  இதனால் கடந்த 6  மாதங்களாக நடத்த வந்த கூடங்குளம் போராட்டம் முடிவுக்கு வருகிறது .  





உண்மையில் இந்த போராட்டத்தின் காரணமாக பல ஆயிரம் கோடிகள் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் ,  இந்த போராட்டத்தில் அரசும் , மக்களும் வெற்றி பெற்று உள்ளார்கள் என்று தான் நான் சொல்லுவேன் .




அரசின் வெற்றி :-  
  • குழம்பி போய் இருந்த கூடங்குளம் பகுதி மக்களின் நியாயமான் அச்சம் தீர்க்கப்பட்டு உள்ளது .   வல்லுனர்களின் குழு மக்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்துள்ளது .  தமிழக அரசு மக்களின் அரசு என்று ஏற்றுகொண்ட மக்கள் அரசின் முடிவை வரவேற்று உள்ளார்கள் .
  • திட்டமிட்டு மக்களை குழப்பிய சில தீய சக்திகளை அரசு அருமையாக அடையாளம் கண்டு சரியான நடவடிக்கையை எடுத்து சமாதானத்தை தமிழகத்தில் நிலை நிறுத்தி உள்ளது .
  • பல நலத்திட்டங்களை அறிவித்ததின் மூலம்  ,  மக்களின் நல் ஆதரவை அரசு தக்க வைத்து உள்ளது .


மக்களின் வெற்றி :-
  • இந்த போராட்டத்தின் மூலம் அணுமின் சக்தியை குறித்த தெளிவான விழிப்புணர்வு கூடங்குளம் பகுதி மக்களுக்கு மாத்திரம் அல்ல , தமிழகம் முழுவதும் ஏற்ப்பட்டுள்ளது .  அதனால் இனி வரும் திட்டங்களில் மக்களை சில தீய சக்திகள் குழப்ப முடியாத சூழல் உருவாகியுள்ளது .
  • நல்ல பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் ,  கூடங்குளம் பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற மாயை உடைக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது .

 இந்த கூடங்குளம் பிரச்சினை குறித்து நான் பல கட்டுரைகள் இதே வலைத்தளத்தில் எழுதியுள்ளேன் .  எதிர் கேள்விகள் கேட்டு எனது கட்டுரையை மேலும் மெருகேற்றிய பதிவுலக நண்பர்களுக்கும் ,  கடுமையான விமரிசனங்கள் வந்தபொழுது என்னை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கும் எனது நன்றியை இந்த 50 வது இடுகையில் நான் தெரிவித்து கொள்ளுகிறேன் . 





Saturday, 17 March 2012

கலைஞர் கருணாநிதியின் வார்த்தைகள் சரியா ....?


சங்கரன்கோவில் தேர்தலின் பிரசாரத்திற்கு வருகை தந்த தமிழக அரசியல் தலைவர்களில் ஒருவரும் , திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் " தீக்குளிப்பதாக" அறிவித்த வார்த்தைகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது .
 
 

தென் ஆசியாவில் மிகப்பெரிய நூலகம் என்ற பெயரை பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலகம் திமுக தலைவரான
கலைஞர் கருணாநிதி கட்டப்பட்டு சென்னையில் திறந்து வைக்கப்பட்டது .  கிட்டத்தட்ட 3 . 75 லட்சம் சதுர அடியில் 180 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த நூலகம் சுமார் 1 . 20 மில்லியன் புத்தகங்கள் வைக்கும் திறன் படைத்தது .  மாத்திரமல்ல இணையத்தின் மூலமாக 2 லட்சம் இணைய புத்தகங்களையும் , 20000 இணைய பத்திரிகைகளையும் கொண்ட பெரிய அறிவு சுரபி என்று சொல்லலாம் .  
 
 
இத்தகைய பெருமை உடைய இந்த நூலகம் தமிழகத்தில் ஆட்சி மாறின பொழுது தற்பொழுதைய முதல்வர் அவர்களால் மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது .  இந்த அறிவிப்பு மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை உண்டுபண்ணியது என்றால் அது மிகையல்ல .  இத்தகைய சூழலில் தான் இந்த நூலகம் மாற்றப்பட்டால் தான் தீக்குளிக்கப் போவதாக கலைஞர் கருணாநிதி அவர்கள் அறிவித்து உள்ளார் . 
 
 
 தமிழகத்தில் சில நிகழ்வுகளின் பொழுது தீக்குளித்து சில சகோதர சகோதரிகள் தங்களை மாய்த்து கொண்ட பொழுது , இந்த மாதிரி முடிவுகளை மக்கள் எடுக்ககூடாது என்று அறிவுறுத்திய தலைவர்களில் ஒருவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் . 
 
 
 இது வரைக்கும் எந்த கட்சியிலும் எந்த தலைவரும் தீக்குளித்து இறந்து போனதில்லை .  ஆனால் அவர்களுக்காக உயிர் கொடுக்கும் சில உண்மை தொண்டர்கள் எல்லா கட்சிகளிலும் உண்டு என்பதை நான் அறிந்து இருக்கிறேன் .  எனவே கலைஞர் கருணாநிதி அவர்களின் இந்த மாதிரி அறிவிப்பு சில முரட்டு தொண்டர்களை உணர்ச்சி வசப்படுத்தலாம் .  அப்படி இருக்கும் பட்சத்தில் அதன் விளைவுகள் மிக பரிதாபமாக இருக்கும் .  சில மாலைகளும் ,  சில போஸ்டர்களும் மாத்திரம் தான் அவர்களுக்கு  மிஞ்சும்.
 
 
 கலைஞர் கருணாநிதி அவர்களின் கோபம் நியாயமானது என்றாலும் ஐந்து முறை தமிழகத்தை ஆண்டவரும் ,. மிக பெரும் தலைவருமான அவரின் கருத்து எனக்கு சரியாக படவில்லை .

Thursday, 15 March 2012

இலங்கை - தமிழர் - இந்தியா - அமெரிக்கா - சீனா


இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்ட விவகாரம் அமெரிக்காவினால் ஜெனிவா தீர்மானத்தின் மூலம் மறுபடியும் கொண்டு வரப்பட்டுள்ளது .   இந்த தீர்மானத்திற்கு ஆதரவாகவும் , இலங்கை அரசுக்கு எதிராகவும் இந்தியா வாக்களிக்க வேண்டும் என உலக நாடுகள் ஒருபுறம் எதிர்பார்க்க ,  இந்திய நாடாளுமன்றம் இது வரை எதிர்பார்க்காத அளவு தமிழக உறுப்பினர்களின் கடும் குரலை எதிர் கொண்டுள்ளது .


 ஆனால் இதனை அமளி நடந்த பிறகும் பிரதமர் ஒன்றுமே பேசவில்லை என்பதாக நாளேடுகளில் நான் வாசித்து அறிந்து கொண்டேன் .  ஒரு புறம் திமுக , அதிமுக  போன்ற முக்கிய கட்சிகளின் தலைவர்கள் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதி வருகிறது . இன்னும் ஒரு புறம் சில குட்டி தமிழக தலைவர்கள் காங்கிரஸ் மற்றும் அதன் தலைமை தமிழர்களுக்கு எதிரானது என்று பேசி வருகின்றனர் .  ஒரு வழியாக தமிழ்நாட்டில் அநேகர் மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டிற்கு அதிருப்தி தான் தெரிவித்து உள்ளனர் .

சரி ....உண்மையில் இதற்க்கு என்ன தான் காரணமாய் இருக்க  முடியும் என்ற எனது கேள்விக்கு கிடைத்த பதில் தான் இந்த பதிவில் ....





  சரி கொஞ்சம் முந்திய காலத்திற்கு கடந்து செல்லுவோம் ....  காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி . இந்திராகாந்தி அவர்கள் ஆட்சி காலத்தில் தான் இலங்கை தமிழ் புலிகளுக்கு தேவையான அத்தனை உதவிகளும் செய்யப்பட்டு வந்தது என்பதை வரலாறு மறக்கவும் /  மறுக்கவும் முடியாது .


1987 ம வருடம் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் பொழுது ஆயிரக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்ட பொழுது Operation பூமாலை என்ற பெயரில் இந்திய விமானப்படை இலங்கையின் கடும் எதிர்ப்பையும் மீறி பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவி செய்தது .


 தொடர்ந்து இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவின் தரப்பில் ஒரு பயங்கரமான திட்டம் கொண்டு வரப்பட்டது . அதாவது அமெரிக்காவின் சார்பில் திரிகோணமலையில் ஒரு ராணுவ தளம் அமைக்கவும் , அதன் மூலம் அமைதி நிலை நாட்டவும் அமெரிக்கா முடிவு செய்தது .  ஆனால் இலங்கையில் எந்த அயல் நாட்டு ராணுவ ராணுவம் வரவேண்டும் என்றாலும் , இந்தியாவின் அனுமதியும் பெறவேண்டும் என்ற எழுதபடாத ஒப்பந்தத்தை யோசித்து பார்த்த இந்தியா , தனது ராணுவத்தை அமைதி படையாக அனுப்ப ஒரு ஒப்பந்தத்தை இலங்கையிடம் ஏற்படுத்தியது .


 இது அமெரிக்க ராணுவம் இலங்கையில் காலூன்ற விடாமல் தடுத்து அதோடு கூட அமைதியை ஏற்ப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியது .  ஆனால் எதிர்பாராத சில மோதல்கள் அமைதி படைக்கும் ,  விடுதலை புலிகளுக்கும் ஏற்ப்பட்டதை தொடர்ந்து அமைதி படை 3 வருடங்களில் இந்தியா திரும்ப தொடங்கியது .   இந்திய அமைதிப்படை நினைத்து இருந்தால் அன்றே விடுதலை புலிகளை அழித்து இருக்கும் என்றும் ஆனால் அதன் நோக்கமே அது அல்ல என்றும் சில அரசியல் நோக்கர்கள் சொல்லுகிறார்கள் .  ஆனாலும் அதன் விளைவாக காங்கிரஸ் தலைவர் , முன்னாள் பிரதமர் திரு ராஜீவ் காந்தி விடுதலை புலிகளால் கொலப்பட்டார் .   அவரை கொலை செய்ததை தங்கள் தவறாகவும் விடுதலை புலிகளின் தலைவர் திரு. பிரபாகரன் செய்தியாளர்கள் கூட்டத்தில் சொல்லியதும் நாம் அறிந்து இருக்கிறோம் .


 சரி .... இந்த சம்பவங்களுக்கும் , இப்பொழுது உள்ள சூழலுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்பது எனக்கு விளங்குகிறது .  சரி தொடர்ந்து பேசுவோம் .  1990 ம வருடங்களுக்கு பிறகு கொஞ்ச காலம் அமைதியாக இருந்த இந்திய பெருங்கடல் இப்பொழுது கொஞ்ச வருடங்களாக கலங்கி போய் உள்ளதற்கு ஒரு காரணம் இருக்கிறது .  அது தான் சீனா .


 இந்திய பெருங்கடலில் இந்தியாவை சுற்றி சுற்றி பல இடங்களிலும் சீனா தனது ராணுவ படைத்தளத்தை நிறுவி வருகிறது .  இந்த சூழ்நிலையில் சீனாவின் அடுத்த முயற்சியாக இலங்கையில் உள்ள Hambantota என்ற இடத்தில சீனாவின் நிதி உதவியுடன் ( 85% ) கட்டப்பட காத்து இருக்கும் மிகப் பெரிய துறைமுகம் இந்திய பெருங்கடலில் இந்தியாவுக்கு மிகபெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .  ஏன் எனில் இதன் மூலம் சீன கப்பல்கள் எளிதாக இந்திய பெருங் கடலில் வலம் வரும் .   இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிரானது என்று அரசிய நோக்கர்கள் கருதுகிறார்கள் .


எனவே சீனாவின் இந்த ஊடுருவும் முயற்சியை எப்படியாவது தடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது .  எனவே இலங்கையுடன் மிக நெருங்கிய நட்பை வளர்த்து கொள்ள இந்தியா விரும்புகிறது . 


 அப்படியானால் நாம் இலங்கைக்கு எதிராக தானே வாக்களிக்க வேண்டும் என்று நீங்கள் கேட்பது நியாயம் தான் .  ஆனால் அப்படி இந்தியா ஒருவேளை வாக்களிக்க நேர்ந்தால் சீனா நேரடியாக இலங்கைக்குள் காலடி எடுத்து வைக்க வழி கிடைத்து விடும் .  அப்படி சீனா இலங்கைக்குள் காலடி எடுத்து வைத்தால் , சில சமயம் போர் கூட நிகழலாம் .  அப்படி போர் நிகழ்ந்தால் வளர்ந்துவரும் இந்திய பொருளாதாரம் தலை கீழாக பாதாளத்தில் சரியவும் வாய்ப்பு உள்ளது .  இன்றைக்கு பெரிய அண்ணன் அமெரிக்கா பொருளாதாரம் தலை கீழாக இருப்பதற்கு காரணமே தேவையில்லாத போர்கள் தான் என்பதை யாரும் மறக்க முடியாது .  


  அப்படி சீனா இலங்கையில் கால் வைத்தால் பெரிய அச்சம் தமிழர்களாகிய நமக்கு தான் என்பதை யாரும் மறுக்கமுடியாது .  ஒரு பக்கம் அரசியல்வாதிகள் .   இன்னொரு பக்கம் பொது மக்கள் .  இன்னும் ஒரு பக்கம் சர்வதேச நெருக்கடி .  இன்னும் ஒரு பக்கம் சீனா .  இந்த இக்கட்டான சூழ் நிலையில் மிக முக்கிய முடிவை கவனமாக எடுக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது என்பது தான் உண்மை 

 
அப்படியெனில் இலங்கையில் நடைபெற்ற இனப்படு கொலையை மறந்து விடவேண்டுமா என்று கேட்டால் , நிச்சயமாக இல்லை .  ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் உயிருக்கு இலங்கை பதில் சொல்லி தான் ஆகவேண்டும் .  



Monday, 12 March 2012

அணு சக்தியில் இந்தியா ஏன் ஆர்வம் காட்டுகிறது ..? - ஒரு பார்வை


கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த விரிவான விவாதங்கள் எல்லா மக்களிடமும் பரவலாக பேசப்பட்டு கொண்டு தான் இருக்கின்றது .  ஒரு வகையில் இதுவும் நல்ல காரியம் என்று தான் நான் சொல்லுவேன் .  ஏன் எனில் , அணுமின் நிலையங்கள் குறித்த ஒரு பெரிய விழிப்புணர்வு மக்களிடம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது .
 அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்த சந்தேகங்கள் மக்கள் மத்தியில் உள்ளதாக கூறி தான் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது .  மக்களின் சந்தேகங்களை அரசும் தீர்த்து கொண்டு தான் இருக்கிறது .

பன்னாட்டு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு தான் இந்திய அரசு அணுமின் நிலையங்களை கொண்டு வருகிறது என்றும் சில பதிவர்கள் எழுதி கொண்டு தான் இருக்கிறார்கள் .  சில பேரோ , கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து அணுகுண்டுகள் தான் தயாரிக்க போகிறார்கள் என்று எழுதி கொண்டு இருக்கிறார்கள் .  ஆனாலும் ஜனநாயக நாட்டில் ,  ஏன் இந்திய அரசு அணுமின் நிலையங்களை ஆதரிக்கிறது என்ற நிலையை நாம் அறிந்து கொள்ளவேண்டியது கொஞ்சம் அவசியமே ....



நாட்டின் வளர்ச்சிக்கு மின்சாரம் மிகவும் அவசியமானது என்பதை நாம் யாரும் மறுக்கமுடியாது .   ஒரு நாட்டின் மின்சாரத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க தான் நாடும் பொருளாதாரத்தில் வளரும் என்பது உண்மை .  இந்தியாவை போன்ற வளரும் நாடுகளில் மின்சாரத்தின் தேவை மிக அதிகம் அதாவது 3 லட்சம் MWe மின்சாரம் இன்னும் தேவை இருக்கிறது ... மின்சாரம் இல்லாமல் நாங்கள் வாழுவோம் என்று சொன்ன திரு . உதயகுமார் கூட இப்பொழுது தடையில்லாதா மின்சாரம் வேண்டும் என்று சொல்லுவதும் அதனால் கூட இருக்கலாம் .
மின்சாரம் பல வகையில் நம்மால் தயாரிக்க முடிந்தாலும் , ஏன் இந்திய அரசு அணுமின் நிலையங்களுக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளது என்ற கேள்வி மாத்திரம் இந்த பதிவின் முக்கியம் என்பதால் நாம் அதை குறித்து மாத்திரம் விவாதிப்போமே ....


அணுமின் நிலையங்கள் 24 மணிநேரமும் ஓயாமல் மின்சாரத்தை கொடுத்து கொண்டே இருக்கும் வல்லமை படைத்தவை .  மழை பெய்தாலும் சரி ,  சூரிய வெளிச்சம் இல்லை என்றாலும் சரி அல்லது காற்று இல்லை என்றாலும் சரி , நம்பகமான மின்சாரம் மற்றும் தடையில்லா மின்சாரம் அணுமின் நிலையங்கள் கொடுப்பது உண்மை .

சரி ... இது மாத்திரம் தான் காரணமா ...?  என்று கேட்டால் இல்லை என்று தான் நான் சொல்லுவேன் .  ஒவ்வொரு மின் நிலையத்திற்கும் ஒரு காரணி தேவைப்படுகிறது .  அதாவது அனல்மின் நிலயத்திற்கு நிலக்கரி ,  சூரிய மின்னிலயதிர்க்கு சூரிய வெப்பம் மற்றும் காற்றாலைகளுக்கு காற்று ,  நீர் மின்  நிலையத்திற்கு நீர் , அணுமின் நிலையத்திற்கு யுரனியம் போன்றவை .  நமது நாட்டின் மின் தேவையில் கிட்டத்தட்ட்ட 66 சதவீதம் நிலக்கரி மூலம் செயல்படும் அனல்மின் நிலையங்கள் மூலமாக கிடைத்து வருகிறது .  ஆனால் நிலவி வரும் கடும் நிலக்கரி தட்டுப்பாட்டின் காரணமாக அனல் மின்நிலையங்களில் மின்சாரம் கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளது.  இந்த பதிவை சுட்டி கூடுதல் தகவல்களை பெறுங்கள் .


சரி அப்படியானால் , அணுமின் நிலையத்திற்கு  தேவையான யூரேனியம் நம்மிடத்தில் இருக்கிறதா என்ற கேள்வி அநேகருக்கு எழும்பும் .  இது ஒரு நியாயமான கேள்வி என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை .


 தற்பொழுது இந்தியாவின் கவனம் யூரேனியம் என்பதை விட தோரியம் என்றால் அது மிகை அல்ல.   ஏன் எனில் இந்தியாவின் இணையில்லா மூன்று நிலை அணுமின் திட்டங்கள் தான் ஒரு தன்னிறைவுக்கு நேராக நம்மை நடத்த போகிறது என்பது தான் நிஜம் .   ஆம் .... உலகிலே அதிக அளவில் தோரியம் கிடைக்கும் நாடு இந்தியாதான் .  ( கிட்டத் தட்ட 3 லட்சம் டன் ) .,  தோரியமும் யூரேனியம் போலவே பிளவுபடும் தனிமம் தான் .   எனவே தோரியம் அணுமின் திட்டங்களை குறித்த இந்தியாவின் கனவு இப்பொழுது அல்ல 1948 ம் வருடத்திலே ஆரம்பித்து விட்டது என்று தான் சொல்லவேண்டும் .


ஆனால் தோரியம் அணுமின் நிலையங்களில் தோரியம் எரிபொருளாக பயன்படுத்த வேண்டுமானால் அதனுடன் கூட புளுட்டோனியம் 239 என்ற தனிமமும் தேவை .  ஆனால் இந்த புளுட்டோனியம் 239 என்ற தனிமம் ,  யூரேனியம் பயன்படுத்தப்படும் அணுமின்  நிலையங்களில் பயன்படுத்த பட்ட எரிபொருளில் கிடைக்கிறது ( அதாவது கழிவு என்று சொல்லுகிறார்களே ... அதில் ) .  அப்படியானால் கழிவு என்று சொல்லப்படும் அந்த புளுட்டோனியம் 239 மற்றும் தோரியம் 232 எரிபொருளாக இரண்டாம் நிலை அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் . 


இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி எழும்பலாம் .  ஏன் இந்த தோரியம் அணுமின் நிலையங்கள் உலகில் அதிகம் இல்லை .   அது ஒரு நியாயமான கேள்வி தான் .   தோரியம் அணுமின் நிலையங்களுக்கு உலகம் ஏன் போகவில்லை என்றால் ஒரே ஒரு காரியம் தான் நம்மால் சொல்ல முடியும் .  அவர்களிடம் அந்த அணுமின் நிலயத்திற்கு தேவையான எரிபொருள் , அதாவது தோரியம் இல்லை என்பதே .


  அப்படியானால் தோரியம் மூலம் இந்தியாவுக்கு நிலையான , நம்பகமான , பசுமையான மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும்  என்பது தான் உண்மை .  ஆனால் சிலர்  இந்த உண்மை மக்களை சேராமல் தடுப்பது தான் கொடுமை .  சரி போகட்டும் ..... இந்த இரண்டாம் நிலை திட்டத்தின் Spent fuel என்ன தெரியுமா ....? நீங்கள் நம்பி தான் ஆகவேண்டும் ..... ஆம் .... மறுபடியும் யூரேனியம் கிடைக்கும் .  அப்படியானால் இந்தியா மின்சாரத்தில் தன்னிறைவு அடையும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று தானே அர்த்தம் .



இது மாத்திரம் தானா காரணம் என்று கேட்டால் .... இல்லை இன்னும் இருக்கிறது .... ஆம் .... அனல் மின் நிலையங்கள் மூலம் வெளிப்படும் நச்சு வாயுக்களை பெருமளவில் இதனால் தவிர்க்க இயலும் .  இது குறித்த விளக்கம் எனது " அணுமின் நிலையங்கள் - சுற்று சூழல் நண்பனா ?"  என்ற இடுகையில் எழுதியுள்ளேன்.  வாசியுங்களேன்


ஆம் ஒரு 1000 Mwe மின்சாரம் தயாரிக்கும் அனல்மின் நிலையம் கிட்டத்தட்ட 320000 டன் சாம்பலையும் ,  6 .5 மில்லியன் டன் கார்பன்டை ஆக்சைடு வாயுவையும் ,  44000 டன் சல்பர் டை ஆக்சைடு வாயுவையும் ,  22000 டன் No2 வாயுவையும் வெளியிடுகிறது .  ஆனால் அதே நேரத்தில் அணுமின் நிலையங்களினால் பூமியை பாதிக்கும் இந்த ஆபத்தான வாயுக்கள் வெளியிடபடாது என்பது எவ்வளவு ஆறுதலான விடயம் ......

அப்படியானால் கதிர்வீச்சு ...!  என்று நீங்கள் கேட்கலாம் ...... தொடர்ந்து எழுதுகிறேன் ......அதை பற்றியும் .......!


தொடர்புடைய பதிவு ....." கூடங்குளம் அணுமின் நிலையம்  -  ஒரு அறிவியல் பார்வை "  


Thursday, 8 March 2012

நிலம் இருக்கிறதா ...? - பத்திரப்படுத்தும் வழிகள்


நெடுங்கால நண்பர் ஒருவரை திடீரென சந்திக்க நேரிட்டது .   அநேக இடங்களில் நிலம் வாங்கி போட்டிருந்த அவர் மிகவும் சோகமாய் இருந்தார் .  காரணம் என்ன என்று கேட்ட பொழுது அவரின் அநேக நிலங்கள் நெடுங்காலம் கவனிக்காமல் விட்டதினால் அவரின் நிலங்கள் பறிபோகும் நிலையில் இருக்கும் சோக கதையை சொன்னார் .  உடனே இந்த பதிவு எழுதும் யோசனை தோன்றியது .
 
 
 
உங்கள் நிலங்களை நீங்கள் பாதுகாக்க கீழ்க்கண்ட யோசனைகளை கடை பிடியுங்கள்  :-


உங்கள் நிலங்களுக்கு உரிய வரியை ( நன்செய் / புன்செய் அல்லது வீட்டு வரி ) செலுத்தி வருகிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் .  இல்லை எனில் வேறு யாராவது உங்கள் நிலத்திற்கு தீர்வை செலுத்தி வந்தால் , அதன் மூலம் கூட அவர்கள் நிலத்திற்கு சொந்தம் கொண்டாடும் உரிமை ஏற்பட்டு விடலாம் .
 
 

வரி சரியாக செலுத்தி ( சிட்டா ) கொண்டு இருந்தால் , அந்த நிலத்திற்கு பட்டா வாங்கி உள்ளீர்களா என்பதை நீங்கள் சரி பாருங்கள் .   சில பேர் நிலத்தை வேறு ஆட்களிடம் இருந்து வாங்கி இருப்பார்கள் . ஆனால் பட்டா மாற்றம் செய்து இருக்க மாட்டார்கள் .  பட்டா உங்களிடம் இல்லையா ...? உடனே தாலுகா அலுவலகம் சென்று கணினி பட்டா ( உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் கொடுத்து ) வாங்குங்கள் . 


பட்டா ஏற்க்கனவே , நீங்கள் வாங்கி இருந்தால் அதன் மாற்றங்களை அவ்வப்பொழுது http://taluk.tn.nic.in/eservicesnew/home.html வலைத்தளத்தில் சரி பார்த்து கொள்ளுங்கள் .  மாற்றம் ஏதும் இருப்பின் , உடனடி கவனம் தேவை .
 
 
சில பேர் , பட்டாவை வாங்கி பார்த்தால் , அந்த பட்டாவில் வேறு பயனாளிகள் பெயர் இருக்கும் . அப்படி இருந்தால் உடனடியாக பட்டாவில் பெயர் மாற்றம் செய்யவேண்டும் .  அப்படி பெயர் மாற்றம் செய்யும் முன் EC என்று சொல்லப்படும் வில்லங்க சான்றிதழ் வாங்கவேண்டும் .


வில்லங்க சான்றிதழ் தாலுகா அலுவலகத்தில் கிடைக்காது . ஆனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் எழுதி மனு கொடுக்கவேண்டும் .  அப்படி கொடுக்கும் பொழுது உங்கள் பத்திரத்தின் தேதிக்கு முந்தைய 10 வருடங்களில் இருந்து தற்பொழுதைய வருடம் வரைக்கும் வில்லங்கம் பார்ப்பது நல்லது .
 
 
 வில்லங்க சான்றிதழ் எனப்படுவது உங்கள் நிலம் யாரால் யாருக்கு எந்த வருடம் எழுதி கொடுக்கப்பட்டது என்று அத்தனை விவரங்களும் உள்ளடக்கியதாக இருக்கும் .  உங்களுக்கு அந்த வில்லங்க சான்றிதழ் வாங்கிய பிறகு , உங்கள் பத்திர பதிவு நாளுக்கு பிறகு ஏதாவது பரிமாற்றம் உண்டாகி இருக்குமானால் அந்த பத்திரத்தின் நகலையும் நீங்கள் அந்த அலுவலகத்தில் தனியாக மனு கொடுத்து பெற்று கொள்ளலாம் .
 

வில்லங்க சான்றிதழ் உங்களின் பரிவர்தனையோடு முடிந்தது என்றால் , நீங்கள் அந்த நகலை கொண்டு உங்கள் பட்டாவின் பெயர் மாற்றத்திற்கு மனு கொடுக்கலாம் .
 
 
 ஒருவேளை உங்கள் காலம் சென்ற தந்தையார் நிலம் உங்கள் பெயர்க்கு மாற்றம் செய்யப்படவேண்டும் எனில் உங்கள் தந்தையாரின் இறப்பு சான்றிதழ் மற்றும் உங்கள் தந்தைக்கு வாரிசு சான்றிதழ் பெற்று அவைகளின் மூலம் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றம் செய்யலாம் .
 
 
கூடிய மட்டும் உங்களின் நிலங்களை வேலி அடைத்து பாதுகாப்பது நல்லது . 


உங்கள் நிலங்களின் சர்வே நம்பர் மற்றும் அளவுகளை ஏதாவது புத்தகத்தில் தொகுத்து வைத்து இருந்தால் , அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்பதற்கு நலமாக இருக்கும் .  சில வீடுகளில் பிள்ளைகள் நிலம் எங்கே என்று தெரியாமல் நிற்பதும் வேடிக்கை தான் . 
 
 
 காசு கொடுத்து வாங்குகிறீர்கள் .... கொஞ்சம் கவனிக்கலாம் தானே ... உங்களுக்கு இந்த பதிவு பிரயோஜனமாய் இருந்தால் அடுத்த பதிவில் பட்டா பெயர் மாற்றம் செய்வதின் முறைகளை எழுத ஆசைப்படுகிறேன் ....

Monday, 5 March 2012

அம்மா அங்கே போ போ .... ! காக்கா இங்கே வா வா .....!


பல வருடங்களாக , பல மாதங்களாக எனது மனதை மிகவும் அரித்து கொண்டு இருந்த இந்த விடயம் இன்றும் இது சம்பந்தப்பட்ட விடயத்தை நேரில் பார்த்தவுடன் நொந்து போனதின் விளைவு தான் இந்த பதிவு ........



வயதான ஒரு தாயாருக்கு மூன்று பிள்ளைகள் . மிகவும் கஷ்டப்பட்டு அந்த பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி , திருமணம் செய்வித்த உடன் பிள்ளைகள் எல்லாரும் , தனது வயதான தாயை விட்டு விட்டு தூர தேசத்திற்கு குடும்பத்தோடு வேலைக்கு சென்று விட்டார்கள் .  தாய் மிகவும் வயது முதிர்ந்து , நோய் வாய் பட்ட போதிலும் , பிள்ளைகளுக்கு வந்து பார்க்க நேரம் இல்லை .  யாரும் பொருட்படுத்தவும் இல்லை ....

 
இந்த நிலையில் அந்த வயதான தாய் இறந்து போனார்கள் .  மேள தாளம் , வேட்டுகளுடன் ( சீக்கிரம் போய் விட்டார் என்ற சந்தோசமா ....? ) இறுதி ஊர்வலமாய் கொண்டு செல்லப்பட்டு குடும்பத்தினர் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டார் ....


 இறந்து 15 ம நாள் நினைவு விழா , இன்று பிள்ளைகள் அனைவராலும் சிறப்புடன் கொண்டாடப்பட்டது .  தாயை அடக்கம் செய்த இடத்திற்கு வந்த பிள்ளைகள் , சில சம்பிராதய சடங்குகளை செய்த பின்பு , தாய்க்கு பிடித்த சில பலகாரங்களை கல்லறையில் படையலாக படைத்தனர் .  அதற்க்கு பிறகு தான் இந்த சம்பவம் நடைபெற்றது .

 
தாயின் கல்லறையில் இருந்து கொஞ்சம் உணவை எடுத்து கொண்டு கொஞ்ச தூரம் தள்ளி போய் கா கா என்று கத்த ஆரம்பித்து விட்டார்கள் .  அட ... என்ன இது என்று பார்க்கும் பொழுது  . அங்கிருந்த சில பெரிய ( ? ) நபர்கள் பேசிக்கொண்டார்கள் .  இந்த அம்மா ஏன் இன்னும் வந்து படையலை சாப்பிடவில்லை என்று .  அட .....! ஆமா .....! அந்த அம்மா காக்கா ரூபத்தில் வந்து சாப்பிடுவார்களாம் .....  பெரும் போராட்டத்திற்கு பிறகு ஒரு காக்கா வந்து ஒரு வாய் சாப்பிட்டதும் , அங்கிருந்தோர் முகத்தில் எல்லாம் என்ன ஒரு மகிழ்ச்சி ....!


அட ... பாவிகளா ...! 10 மாதம் சுமந்து பெத்த தாய் நோயில் கிடக்கும் பொழுது வந்து பார்பதற்கு நாதியில்லை  , அந்த தாயின் கடைசி நிமிடத்தில் கூட உணவளிப்பதற்கு யாரும் வரவில்லை .  இப்பொழுது காக்காவை கூப்பிடுகிறார்களாம் .....! என்ன கொடுமை .....

அம்மா நீ போ ...போ......!   காக்கா இங்கே வா.....வா......