Monday 12 March 2012

அணு சக்தியில் இந்தியா ஏன் ஆர்வம் காட்டுகிறது ..? - ஒரு பார்வை


கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த விரிவான விவாதங்கள் எல்லா மக்களிடமும் பரவலாக பேசப்பட்டு கொண்டு தான் இருக்கின்றது .  ஒரு வகையில் இதுவும் நல்ல காரியம் என்று தான் நான் சொல்லுவேன் .  ஏன் எனில் , அணுமின் நிலையங்கள் குறித்த ஒரு பெரிய விழிப்புணர்வு மக்களிடம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது .
 அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்த சந்தேகங்கள் மக்கள் மத்தியில் உள்ளதாக கூறி தான் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது .  மக்களின் சந்தேகங்களை அரசும் தீர்த்து கொண்டு தான் இருக்கிறது .

பன்னாட்டு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு தான் இந்திய அரசு அணுமின் நிலையங்களை கொண்டு வருகிறது என்றும் சில பதிவர்கள் எழுதி கொண்டு தான் இருக்கிறார்கள் .  சில பேரோ , கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து அணுகுண்டுகள் தான் தயாரிக்க போகிறார்கள் என்று எழுதி கொண்டு இருக்கிறார்கள் .  ஆனாலும் ஜனநாயக நாட்டில் ,  ஏன் இந்திய அரசு அணுமின் நிலையங்களை ஆதரிக்கிறது என்ற நிலையை நாம் அறிந்து கொள்ளவேண்டியது கொஞ்சம் அவசியமே ....



நாட்டின் வளர்ச்சிக்கு மின்சாரம் மிகவும் அவசியமானது என்பதை நாம் யாரும் மறுக்கமுடியாது .   ஒரு நாட்டின் மின்சாரத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க தான் நாடும் பொருளாதாரத்தில் வளரும் என்பது உண்மை .  இந்தியாவை போன்ற வளரும் நாடுகளில் மின்சாரத்தின் தேவை மிக அதிகம் அதாவது 3 லட்சம் MWe மின்சாரம் இன்னும் தேவை இருக்கிறது ... மின்சாரம் இல்லாமல் நாங்கள் வாழுவோம் என்று சொன்ன திரு . உதயகுமார் கூட இப்பொழுது தடையில்லாதா மின்சாரம் வேண்டும் என்று சொல்லுவதும் அதனால் கூட இருக்கலாம் .
மின்சாரம் பல வகையில் நம்மால் தயாரிக்க முடிந்தாலும் , ஏன் இந்திய அரசு அணுமின் நிலையங்களுக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளது என்ற கேள்வி மாத்திரம் இந்த பதிவின் முக்கியம் என்பதால் நாம் அதை குறித்து மாத்திரம் விவாதிப்போமே ....


அணுமின் நிலையங்கள் 24 மணிநேரமும் ஓயாமல் மின்சாரத்தை கொடுத்து கொண்டே இருக்கும் வல்லமை படைத்தவை .  மழை பெய்தாலும் சரி ,  சூரிய வெளிச்சம் இல்லை என்றாலும் சரி அல்லது காற்று இல்லை என்றாலும் சரி , நம்பகமான மின்சாரம் மற்றும் தடையில்லா மின்சாரம் அணுமின் நிலையங்கள் கொடுப்பது உண்மை .

சரி ... இது மாத்திரம் தான் காரணமா ...?  என்று கேட்டால் இல்லை என்று தான் நான் சொல்லுவேன் .  ஒவ்வொரு மின் நிலையத்திற்கும் ஒரு காரணி தேவைப்படுகிறது .  அதாவது அனல்மின் நிலயத்திற்கு நிலக்கரி ,  சூரிய மின்னிலயதிர்க்கு சூரிய வெப்பம் மற்றும் காற்றாலைகளுக்கு காற்று ,  நீர் மின்  நிலையத்திற்கு நீர் , அணுமின் நிலையத்திற்கு யுரனியம் போன்றவை .  நமது நாட்டின் மின் தேவையில் கிட்டத்தட்ட்ட 66 சதவீதம் நிலக்கரி மூலம் செயல்படும் அனல்மின் நிலையங்கள் மூலமாக கிடைத்து வருகிறது .  ஆனால் நிலவி வரும் கடும் நிலக்கரி தட்டுப்பாட்டின் காரணமாக அனல் மின்நிலையங்களில் மின்சாரம் கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளது.  இந்த பதிவை சுட்டி கூடுதல் தகவல்களை பெறுங்கள் .


சரி அப்படியானால் , அணுமின் நிலையத்திற்கு  தேவையான யூரேனியம் நம்மிடத்தில் இருக்கிறதா என்ற கேள்வி அநேகருக்கு எழும்பும் .  இது ஒரு நியாயமான கேள்வி என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை .


 தற்பொழுது இந்தியாவின் கவனம் யூரேனியம் என்பதை விட தோரியம் என்றால் அது மிகை அல்ல.   ஏன் எனில் இந்தியாவின் இணையில்லா மூன்று நிலை அணுமின் திட்டங்கள் தான் ஒரு தன்னிறைவுக்கு நேராக நம்மை நடத்த போகிறது என்பது தான் நிஜம் .   ஆம் .... உலகிலே அதிக அளவில் தோரியம் கிடைக்கும் நாடு இந்தியாதான் .  ( கிட்டத் தட்ட 3 லட்சம் டன் ) .,  தோரியமும் யூரேனியம் போலவே பிளவுபடும் தனிமம் தான் .   எனவே தோரியம் அணுமின் திட்டங்களை குறித்த இந்தியாவின் கனவு இப்பொழுது அல்ல 1948 ம் வருடத்திலே ஆரம்பித்து விட்டது என்று தான் சொல்லவேண்டும் .


ஆனால் தோரியம் அணுமின் நிலையங்களில் தோரியம் எரிபொருளாக பயன்படுத்த வேண்டுமானால் அதனுடன் கூட புளுட்டோனியம் 239 என்ற தனிமமும் தேவை .  ஆனால் இந்த புளுட்டோனியம் 239 என்ற தனிமம் ,  யூரேனியம் பயன்படுத்தப்படும் அணுமின்  நிலையங்களில் பயன்படுத்த பட்ட எரிபொருளில் கிடைக்கிறது ( அதாவது கழிவு என்று சொல்லுகிறார்களே ... அதில் ) .  அப்படியானால் கழிவு என்று சொல்லப்படும் அந்த புளுட்டோனியம் 239 மற்றும் தோரியம் 232 எரிபொருளாக இரண்டாம் நிலை அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் . 


இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி எழும்பலாம் .  ஏன் இந்த தோரியம் அணுமின் நிலையங்கள் உலகில் அதிகம் இல்லை .   அது ஒரு நியாயமான கேள்வி தான் .   தோரியம் அணுமின் நிலையங்களுக்கு உலகம் ஏன் போகவில்லை என்றால் ஒரே ஒரு காரியம் தான் நம்மால் சொல்ல முடியும் .  அவர்களிடம் அந்த அணுமின் நிலயத்திற்கு தேவையான எரிபொருள் , அதாவது தோரியம் இல்லை என்பதே .


  அப்படியானால் தோரியம் மூலம் இந்தியாவுக்கு நிலையான , நம்பகமான , பசுமையான மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும்  என்பது தான் உண்மை .  ஆனால் சிலர்  இந்த உண்மை மக்களை சேராமல் தடுப்பது தான் கொடுமை .  சரி போகட்டும் ..... இந்த இரண்டாம் நிலை திட்டத்தின் Spent fuel என்ன தெரியுமா ....? நீங்கள் நம்பி தான் ஆகவேண்டும் ..... ஆம் .... மறுபடியும் யூரேனியம் கிடைக்கும் .  அப்படியானால் இந்தியா மின்சாரத்தில் தன்னிறைவு அடையும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று தானே அர்த்தம் .



இது மாத்திரம் தானா காரணம் என்று கேட்டால் .... இல்லை இன்னும் இருக்கிறது .... ஆம் .... அனல் மின் நிலையங்கள் மூலம் வெளிப்படும் நச்சு வாயுக்களை பெருமளவில் இதனால் தவிர்க்க இயலும் .  இது குறித்த விளக்கம் எனது " அணுமின் நிலையங்கள் - சுற்று சூழல் நண்பனா ?"  என்ற இடுகையில் எழுதியுள்ளேன்.  வாசியுங்களேன்


ஆம் ஒரு 1000 Mwe மின்சாரம் தயாரிக்கும் அனல்மின் நிலையம் கிட்டத்தட்ட 320000 டன் சாம்பலையும் ,  6 .5 மில்லியன் டன் கார்பன்டை ஆக்சைடு வாயுவையும் ,  44000 டன் சல்பர் டை ஆக்சைடு வாயுவையும் ,  22000 டன் No2 வாயுவையும் வெளியிடுகிறது .  ஆனால் அதே நேரத்தில் அணுமின் நிலையங்களினால் பூமியை பாதிக்கும் இந்த ஆபத்தான வாயுக்கள் வெளியிடபடாது என்பது எவ்வளவு ஆறுதலான விடயம் ......

அப்படியானால் கதிர்வீச்சு ...!  என்று நீங்கள் கேட்கலாம் ...... தொடர்ந்து எழுதுகிறேன் ......அதை பற்றியும் .......!


தொடர்புடைய பதிவு ....." கூடங்குளம் அணுமின் நிலையம்  -  ஒரு அறிவியல் பார்வை "  


12 comments:

  1. Replies
    1. Dear Anonymous Friend,

      thank you very much for your visit and comments...

      Please visit again...

      Delete
  2. எல்லாரும் கூட்டத்தோடு கோவிந்தா போடும்போது நீங்கள் மட்டும் இன்னொரு கோணத்தில் சிந்தித்து எழுதுவது பாராட்டத்தக்க விஷயம்.

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...

      தங்களின் வார்த்தைகள் என்னை ஊக்கப்படுத்துகிறது .....

      தொடர்ந்து வருகை தாருங்கள் ... நன்றி

      Delete
  3. கடந்த பத்து ஆண்டுகளில் அ.தி.மு.க; தி.மு.க. இரு கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் அரசின் சார்பில் புதிதாக மின் நிலையம் எதுவும் அமைக்கப்படவில்லை என்பதே உண்மை.

    இருப்பினும் மின்வெட்டு தீவிரமடைய அடைய, மக்களின் கோபம் இந்தக் கட்சிகளை நோக்கித் திரும்பாமல், அணு உலைக்கு எதிராகப் போராடும் கூடங்குளம், இடிந்தகரை மக்களை நோக்கித் திட்டமிட்டே திருப்பப் படுகிறது.

    தினமலர், காங்கிரசு அமைச்சர் நாராயணசாமி, ப.சிதம்பரம், பாரதிய ஜனதாக் கட்சி, கருணாநிதி, போலி கம்யூனிஸ்டுகள் ஆகிய அனைவரும் ஒரே குரலில் இந்தப் பொய்ப்
    பிரச்சாரத்தை நடத்துகிறார்கள்.

    கடுமையானதொரு மின்பற்றாக் குறையில் நம்மைத் தள்ளிய குற்றவாளிகள் இவர்கள்தான். அணு மின்சாரம்தான் இதற்குத் தீர்வு என்று அடுத்த படுகுழியையும் இவர்கள் நமக்குத் தயார் செய்கிறார்கள்.

    “மின்வெட்டை அகற்று! கூடங்குளத்தைத் திற!” என்று கோரும் சிறு தொழில் அதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகள் போன்ற பல்வேறு தரப்பினரும், தம்மையறியாமல் உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கிறார்கள்.

    மின்வெட்டுக்கு எந்த விதத்திலும் பொறுப்பாக்க முடியாத, கூடங்குளம் இடிந்தகரை மக்களைக் குற்றவாளிகளாக்குகிறார்கள்.

    ReplyDelete
  4. “தமிழகத்தில் மின்பற்றாக்குறையின் அளவு 30%. இந்தப் பற்றாக்குறையை அனைவரும் சமமாகப் பகிர்ந்து கொள்வதற்குப் பதிலாக, இலட்சக்கணக்கான சிறு தொழில்களுக்கும், மேற்கு மற்றும் தென் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் 65% மின்வெட்டு விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில், சென்னையிலுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஐ.டி. நிறுவனங்கள் போன்றவற்றிற்கு மின்வெட்டே இல்லை.

    மேற்கூறிய நிறுவனங்கள் தமக்குத் தேவையான மின்சாரத்தை நேரடியாகத் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்தோ, தேசியத் தொகுப்பிலிருந்தோ வாங்கிக் கொள்ள ஏதுவாக கம்பித் தடங்களைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அவற்றைக் காட்டிலும் தமிழக மின்வாரியம் அளிக்கும் மின்சாரத்தின் விலை குறைவு என்பதால், தமது செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த மின்சாரத்தை ஒட்ட உறிஞ்சுகிறார்கள்.

    ReplyDelete
  5. இனி தமிழகத்தின் மின் உற்பத்தி, விநியோகம் தொடர்பான சில அடிப்படையான புள்ளி விவரங்களைப் பார்ப்போம். 2010-11ஆம் ஆண்டில் தமிழகம் பயன்படுத்திய மொத்த மின்சாரம் 7499 கோடி யூனிட்டுகள். இதில் மாநில அரசுக்கு சொந்தமான மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் 2578.40 கோடி யூனிட்டுகள். மீதமுள்ள 4920.60 கோடி யூனிட்டுகளை மத்திய மின் தொகுப்பிலிருந்தும் தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்தும் தமிழக அரசு வாங்கியிருக்கிறது.

    மொத்த மின்சாரத்தில் 18.5% கம்பித்தட இழப்பு மற்றும் திருட்டுக்குப் போய் விடுகிறது. இதன் மூலம் ஆண்டு தோறும் வாரியத்துக்கு ஏற்படும் இழப்பு மட்டும் ரூ.2000 கோடி.

    மாநில அரசு உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் விலை குறைந்த பட்சம் யூனிட்டுக்கு 0.21 காசுகள் (நீர்மின்சக்தி). அதிக பட்சம் யூனிட்டு ரூ.2.14 காசுகள்(அனல்மின்சக்தி).

    தமிழகத்திலுள்ள தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து தமிழக அரசு விலைக்கு வாங்கும் மின்சாரத்தின் விலை குறைந்த பட்சம் யூனிட்டுக்கு ரூ.3.96. அதிகபட்சம் ரூ.17.00.

    ReplyDelete
  6. 2012 கணக்கீட்டின்படி மின்வாரியம் உற்பத்தி செய்கின்ற மற்றும் வாங்குகின்ற மொத்த மின்சாரத்தின் சராசரி அடக்க விலை யூனிட் ஒன்றுக்கு ரூ.5.31. விற்பனை செய்கின்ற மின்சாரத்தின் சராசரி விலை யூனிட் ஒன்றுக்கு 3.81. இந்த வகையில் தற்போது யூனிட் ஒன்றுக்கு ஏற்படும் இழப்பு ரூ.1.50. இதனை ஈடு செய்வதற்குத்தான் மின் கட்டண உயர்வு என்று ஜெயா அரசு கூறுகிறது.

    தமிழகத்தின் மின்சாரம் வீடுகள் 27%, விவசாயம் 20.93%, வணிக நிறுவனங்கள் 10.43%, தொழிற்சாலைகள் 34.92% என்றவாறு நுகரப்படுகிறது. வீடுகளுக்கு ரூ.1.85 முதல் ரூ.2.90 வரை; வணிக நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.5.05 முதல் ரூ.6.00 வரை; தொழில் துறைக்கு ரூ.3.30 முதல் ரூ.4.05 வரை என்ற விகிதத்தில் கட்டணம் விதிக்கப்படுகிறது. இதில் வீடுகளுக்கான மின் கட்டணத்தை யூனிட்டுக்கு குறைந்த பட்சம் ரூ.2.00 இல் தொடங்கி அதிகபட்சம் ரூ.5.75 என்று உயர்த்தவிருப்பதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

    மேற்கூறிய விவரங்களிலிருந்து பெறப்படும் உண்மை என்ன? மாநில அரசானது, மின் உற்பத்தி நிலையங்களைத் தானே நிறுவாமல், தனியார் முதலாளிகளிடமிருந்து மின்சாரத்தை வாங்குவதால்தான் மின்சாரத்தின் விலை பன்மடங்கு அதிகரிக்கிறது. தமிழக மின்வாரியத்தின் 9% மின்சாரத் தேவையை நிறைவு செய்து விட்டு, வாரியத்தின் வருவாயில் 35 சதவீதத்தை தனியார் முதலாளிகள் விழுங்கிவிடுகின்றனர் (இந்தியா டுடே, பிப்,29, 2012).

    ReplyDelete
  7. முதலாளிகளுக்கு வழங்கும் கல்லூரிகள், ஏற்றுமதி மானியங்கள், இறக்குமதி வரிச்சலுகைகள் என மக்களின் வரிப்பணத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரிக் கொட்டுகின்ற அரசு, இவற்றையெல்லாம் முதலாளிகளுக்கான ‘இலவசம்’ என்று அழைப்பதில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

    யூனிட் 17 ரூபாய் வரை விலை கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கும் மின்சாரத்தை, ரூ.3.30 விலையில் கார்ப்பரேட், பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் தமிழக அரசு, இதனை மானியம் என்று கூறுவதில்லை.

    ReplyDelete
  8. இந்தப் பத்தாண்டுகளில் ஜெயாவும் கருணாநிதியும் போட்டி போட்டுக் கொண்டு தமிழகத்தில் கொண்டு வந்து இறக்கியிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், சென்னையிலும் மற்ற பெரு நகரங்களிலும் பெருகியிருக்கும் ஆடம்பர மால்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், நடுத்தர வர்க்கத்தினரிடையே பெருகியிருக்கும் விதவிதமான மின் உபகரணங்கள், ஏ.சி.மிசின்கள் ஆகிய இவற்றுக்கான மின்சாரத்தை யார் கொடுப்பது?

    இதற்காகவேனும் மாநில அரசு தனது சொந்த அனல் மின்நிலையங்களைத் தொடங்கவேண்டும் என்று அ.தி.மு.க; தி.மு.க அரசுகளுக்குப் புரியாததற்குக் காரணம் அறியாமையா, நிர்வாகத் திறமையின்மையா?

    ReplyDelete
  9. வணக்கம் தோழரே............. நமக்கு மின்சாரம் வேண்டும் என்று கூடங்குளம் மக்கள் தலை மேல் மெழுகுவர்த்தி ஏற்றக்கூடாது என்பதே நமது வேண்டுகோள். மின்சாரம் வேண்டும் அணு உலை கட்டுங்கள் என்று கூடங்குளம் மக்கள் கேட்கவில்லை. இது இந்தியனுக்கு புரிந்து தமிழனாக வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. india yen aarvam kaattukirathu? makkal panathai kollai adikka

    ReplyDelete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி