Friday 10 May 2013

மதிப்பெண் என்ற எமன் - வேதனையான தகவல்


+2 தேர்வு முடிவுகள் கடந்த 09 05 2013 அன்று வெளியிடப்பட்டது .   மாநில மற்றும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்கள் குறித்து பத்திரிகைகள் பரபரப்பு செய்திகள் வெளியிட்டுக்கொண்டு இருக்க , அதிகம் வெளிவராத சில வேதனையான செய்திகளை உள்ளடக்கியது தான் இந்த கட்டுரை .



போட்டிகள் மிகுந்த   உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று பெரும்பான்மையான பெற்றோர்கள் நினைப்பதும் ,  தாங்கள் அடைய முடியாத கனவுகளை தங்கள் பிள்ளைகள் அடையவேண்டும் என்று ஆசைப்படுவதும் நியாயம் தான் .  ஆனால் அங்கு தான் அவர்களை அறியாமல் நெருக்கடியை உண்டாக்குகிறார்கள் என்பது தான் வேதனை உண்டாக்கும் விடயம் .



குறிப்பாக 10 வது வகுப்பு அல்லது +2 படிக்கும் குழந்தைகள் வீட்டில் பிள்ளைகளை விட பெற்றோர்கள் படும் பாடு தான் அதிகமாக இருக்கும் .   காரணம் மதிப்பெண் என்ற போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற ஆசை தான் 


சில பெற்றோர்கள் பிள்ளைகளை வெகுவாக நெருக்குவதால் , அவர்களின் எண்ணம் சிந்தனை எல்லாம் யோசித்து செயல்படுவதை விட்டு விட்டு இயந்திர ரீதியில் பாடங்களை படிக்கிறார்கள் .    இவ்வாறு செய்வது மதிப்பெண்களை தரும் என்றாலும் அறிவை மழுங்கடிக்கும் எனபதே உண்மை .   மாறாக பிள்ளைகளும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள் .  எனவே தான் தேர்வு முடிந்த பின்பு ,மதிப்பெண்களை எதிர்கொள்ளுவது கூட மாணவர்களால் முடியவில்லை 



இப்படி மன நெருக்கடியில் நாகர்கோயில் பகுதியில் ஒரு மாணவனும் , சிந்துஜா என்கிற மாணவியும் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று நாளேடுகளில் வாசிக்க நேர்ந்தது.  இன்னும் பல ஆயிரம் மாணவர்கள் ( மதிப்பெண் போட்டியில் பின் தங்கியவர்கள் ) இப்படி மன நெருக்கடியில் சிக்கி தான் உள்ளார்கள்


 அதிக மதிப்பெண்கள் பெற்றால் நல்ல பாடங்கள் எடுத்து படிக்க முடியும் என்பது உண்மை தான்.   ஆனால் மதிப்பெண்கள் எமனாக பிள்ளைகளை அழிக்கக்கூடாது .   வாழ்வதற்கும் , வளர்வதற்கும் அநேகம் வழிகள் இந்த உலகத்தில் இருக்கும் பொழுது , மதிப்பெண்களை காரணம் காட்டி , பிள்ளைகளை ஒடுக்குவதை தவிர்த்து ,  சந்தோஷ வாழ்க்கையின் முகடுகளை பக்குவமாய் எடுத்து கூறினால் இளைய தலைமுறை வளரும் என்பதில் சந்தேகம் இல்லை


No comments:

Post a Comment

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி