கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து மக்கள் சில வாரங்களாக போராடி வருகிறதை நாளேடுகள் மூலம் அறிந்திருக்கிறோம் . மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லி கொள்ளும் தலைவர்கள் இந்த போராட்டத்தை முன் நின்று நடத்துகின்றனர் .
போராட்டத்தின் அடிப்படை என்னவென்று பார்க்கும் போது அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட காரியங்களில் மக்களுக்கு ஏற்பட்ட அச்ச உணர்வு தான் என்று பொதுவாக அரசால் கூறப்பட்டுள்ளது . அந்த அச்ச உணர்வை நீக்கும் வகையில் மத்திய , மாநில அரசுகள் தனி தனி குழுக்கள் அமைத்து பேச்சு வார்த்தைக்கு ஆயத்தமாகி வருகின்றன .

பேச்சு வார்த்தையின் முதல் சுற்றில் போராட்ட குழுவின் சார்பில் 50 கேள்விகள் மத்திய குழுவிடம் அளிக்கப்பட்டதையும் , அதற்க்கான பதில் தமிழ் , மலையாளம் , இந்தி ( இது தமிழன் போராட்டம் என்று சொல்லுபவர்கள் கவனிக்க ) மொழிகளில் வேண்டும் என்று சொன்னதையும் , அதை மக்கள் மத்தியில் நாங்கள் விநியோகித்து அவர்கள் கருத்தை கேட்போம் என்று சொன்னதையும் நான் அறிந்த போது உண்மையில் கொஞ்சம் மகிழ்வடைந்தேன் . ஏன் எனில் பாதுகாப்பான அணுமின் நிலையத்தை குறித்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தால் மக்கள் அச்சம் தீர்ந்து விடும் என்பது எனது எண்ணமாயிருந்தது .
இந்த சூழலில் தான் போராட்ட தலைவர் திரு . உதயகுமார் மற்றும் திரு . பொன்ராஜ் ( திரு . அப்துல் கலாம் அவர்கள் உதவியாளர் ) இருவரும் கலந்து கொண்ட ஒரு நேரடி நிகழ்ச்சியை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் காண நேர்ந்தது . அது தான் இந்த பதிவு எழுதப்படுவதின் மூலக்காரணம் .
பதிவுலக நண்பர்கள் பல பேரும் இந்த அணுமின் நிலையத்தை பற்றி எழுதும் போது இப்படி ஒரு கேள்வியை கேட்பார்கள் , " அணுமின் நிலையத்தை பார்லிமென்ட் பக்கத்தில் அல்லது ஜனாதிபதி மாளிகையில் வைத்தால் என்ன ...?" என்று . நான் அந்த கேள்வியை படிக்கும் போது , என்ன இது சிறு பிள்ளை போல கேள்வி என்று நினைத்து கொள்ளுவேன் .
ஆனால் இதே கேள்வியை ( அணுமின் நிலையத்தை ஜனாதிபதி மாளிகையில் வைத்தால் என்ன ...? ) நேரடி ஒளிபரப்பில் பேசிக்கொண்டிருக்கும் போது திரு . உதயகுமார் அவர்கள் திரு . பொன்ராஜ் அவர்களிடம் கேட்டார் . திரு . பொன்ராஜ் சொன்னார் , " ஐயா , நீங்கள் மிகுந்த அறிவாளி என்று நான் பேசிக்கொண்டிருக்கிறேன் , ஆனால் நீங்கள் இப்படி கேள்வி கேட்கிறீர்கள் " என்று. இந்த பதிலுக்கு திரு. உதயகுமாரின் எதிர்ப்பு பலமாய் இருந்திருக்கும் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் தோற்று போய் விட்டீர்கள் . ஆமா .... ஒரு அசடு வழிந்த சிரிப்பு ஒன்றை தான் திரு . உதயகுமார் பதிலாக கொடுத்தார் .
இங்கே நான் ஒரு கேள்வி கேட்கிறேன் . ஐயா , உங்களுக்கும் தெரியும் . அணுமின் நிலையத்தை ஜனாதிபதி மாளிகையில் வைக்கமுடியாது என்று . பின் ஏன் நீங்கள் இதே போல ஒரு கேள்வியை மக்கள் மத்தியில் கேட்டு மக்களை குழப்புகிறீர்கள் ....? அதற்கு காரணம் என்ன ...?
எல்லாவற்றிற்கும் மேலாக முத்தாய்ப்பு வைத்தது போல , கடைசியில் அந்த நிகழ்ச்சி நிறைவுறும் போது திரு . உதயகுமார் ஒரு கருத்து சொன்னார் , " யார் சொன்னாலும் சரி , பிரதமர் சொன்னாலும் சரி , மூன்று அல்ல முப்பதாம் தலைமுறை அணுஉலை வந்தாலும் எங்களுக்கு அது வேண்டாம் " என்று .
இங்கு தான் எனக்கு தூக்கி வாரிப்போட்டது .... அப்படியானானால் .....
- நீங்கள் எதற்கு குழு அமைத்தீர்கள் ...?
- எதற்கு 50 கேள்விகள் அமைத்து கொடுத்தீர்கள் ...?
- மக்கள் ஏற்று கொண்டால் போராட்டம் வாபஸ் என்று எப்படி சொன்னீர்கள் ...?
- உங்கள் கேள்விக்கு திரு . பொன்ராஜ் பதில் கொடுக்கும் போது ஏன் இடைமறித்து பேசினீர்கள் ...?
- தமிழனுக்கு எதிரான அணு உலை என்று சொல்லி ஏன் மூன்று மொழிகளில் பதிலை கேட்டீர்கள் ...?
இதெல்லாம் என்னுடைய சில கேள்விகள் ....ஏன் தெரியுமா , யார் சொன்னாலும் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லுபவர் கேள்விக்கு கொடுக்கப்படும் பதிலை எப்படி ஆய்வு செய்வார் ...?
இப்படி இவர் எடுக்கும் பல காரியங்கள் , இவர் மக்களின் அச்சத்தை தீர்க்கும் வழிமுறைகளை விரும்பவில்லை என்பதையும் , மக்களை மேலும் மேலும் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டும் எனபதையும் மிக தெளிவாக் சுட்டி காண்பிக்கிறது .
இது இவரின் ரெட்டை வேடம் அல்லாமல் வேறென்ன ....? என்ற என கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லும் . காத்திருக்கிறேன் அது வரை ...!