Friday 18 November 2011

கூடங்குளம் 50 கேள்விகள் - தொடர்ச்சி ....


எனது சென்ற பதிவின் (கூடங்குளம் - 50 கேள்விகள் ...ஆனால் ஒரே பதில் ) தொடர்ச்சியாக இந்த பதிவை எழுத முற்படுகிறேன் .   சென்ற பதிவில் கூடங்குளம் போராட்ட குழுவின் 50  கேள்விகளுக்கு அரசு பதில் கொடுப்பதில் சந்தேகம் இல்லை என்றும் ஆனால் போராட்ட குழு அதை ஏற்று கொள்ளுவதில் எனக்கு சந்தேகம் இருப்பதாகவும் எழுதியிருந்தேன் .   எனது சந்தேகம் இன்று நிறைவேறியதால் இந்த தொடர் பதிவை எழுதுகிறேன் .


கடந்த சில நாட்களாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தொடர் ஆய்வில் ஈடுபட்டிருந்த மத்திய ஆய்வு குழுவினர் , 50 கேள்விகளுக்கான பதில்களோடு , தமிழக அரசு அமைத்த குழுவோடு பேச்சு வார்த்தை நடத்த சென்றதாகவும் ,  கூட்டத்தின் நடுவில் போராட்ட குழுவினர் வெளிநடப்பு செய்ததாகவும் தொலைகாட்சிகளில் செய்தி வெளியாகி உள்ளது .  


இப்பொழுதும் எனது கேள்வி ஒன்றே ஓன்று தான் .   திரு உதயகுமார் அவர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பேசும் போது , " நாங்கள் 50  கேள்விகளை கேட்கிறோம் . அதற்கு பதில் தமிழ் ,  மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வேண்டும் .  அதை மக்களிடம் நாங்கள் சமர்ப்பித்து அவர்கள் கருத்தை கேட்டு அறிந்த பின்பு மக்களின் அச்சம் நீங்கி விட்டால் ,  நாங்கள் போராட்டதை கைவிடுகிறோம் "  என்று கூறினார் .


அது எப்படி ஐயா , நீங்கள் 50  கேள்விகளுக்கான பதிலை மக்களிடம் கொண்டு போய் சேர்க்காமல் , அந்த இடத்திலே வெளிநடப்பு செய்ய முடியும் ...?  எங்கே மக்கள் அச்சம் நீங்கி விடுவார்கள் என்ற பயமா உங்களுக்கு ...?.    இப்பொழுது தான் நீங்கள் மக்களின் அச்ச உணர்வை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறீர்களோ என்று நினைக்க தோன்றுகிறது ....
 

ரெட்டை வேடம் .... ரெட்டை வேடம் என்று அடிக்கடி சொல்லுவீர்களே ... அது இது தானோ ....?  காலம் பதில் சொல்லும் வரை நானும் கொஞ்சம் காத்திருக்கிறேன் .

14 comments:

  1. பலருக்கும் இந்த சந்தேகம் உள்ளது. அவர்களையும் பிடித்துத் தொங்க ஆள் உள்ளது.

    ReplyDelete
  2. @ fundoo : நண்பருக்கு வணக்கம் . தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  3. சிறிய கேள்வி: போபால் விபத்திற்கு பிறகு கழிவுகள் அகற்றப்பட்டு விட்டதா? அனைவருக்கும் இழப்பீடு கொடுக்கப்பட்டுவிட்டதா? நாளை இங்கு அணு விபத்த ஏற்பட்டால் சுற்று புற மக்களின் கதி என்ன? மீனவர்களின் கதிதான் ஏற்படும். கம்ப்யூட்டர் முன் அமர்ந்து எளிமையாக மற்றவர்களை தேச துரோகி என்று கூறுவது எளிது.

    ReplyDelete
  4. @ ஆனந்த் : நண்பருக்கு வணக்கம் . தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    போபால் இடத்தில இயங்கின யூனியன் கார்பைட் நிறுவனத்தையும் , கூடங்குளம் அணுமின் நிலையத்தையும் நீங்கள் எப்படி ஒப்பீடு செய்கிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை . அந்த விபத்து நடந்த 1984 ம் வருடத்திற்கு பிறகு தான் இந்தியாவில் அநேக அணுமின் நிலையங்கள் கட்டப்பட்டு இப்பொழுது வரை பாதுகாப்புடன் யானி வருகிறது என்பதை தாங்கள் மறுக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன் . இன்னும் ஓன்று அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அனைத்தும் இந்திய மற்றும் உலகளாவிய அமைப்புகள் ( IAEA , WANO ) மூலம் கண்காணிக்கப்படும் என்பதயும் தாங்கள் அறிந்திருப்பீர்கள் .

    // கம்ப்யூட்டர் முன் அமர்ந்து எளிமையாக மற்றவர்களை தேச துரோகி என்று கூறுவது எளிது.//
    தங்களுடைய இந்த கருத்தை நான் வன்மையாக மறுக்கிறேன் . என்னுடைய பதிவுகள் எதிலும் தேச துரோகி என்று யாரையும் குறிப்பிடவில்லை என்பதை நான் தங்களுக்கு சுட்டி காண்பிக்கிறேன் . என்னுடைய பதிவுகள் அனைத்தும் ஆதாரமில்லாமல் எழுதப்பட வில்லை என்பதயும் தாங்கள் அறிந்திருப்பீர்கள் .

    நன்றி .. தொடர்ந்து வருகை தாருங்கள் ..

    ReplyDelete
  5. மன்னிக்கவும். உங்களை பற்றி சொல்லவில்லை. பொதுவாக அனைவரும் "தேசதுரோகி" என்று பயன்படுத்துவதை குறிப்பிட்டேன்.

    IAEA , WANO, UNO இன்னும் என்ன என்ன இருக்கின்றனவோ, அவை எல்லாம் அமெரிக்கா மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு மட்டுமே சாதகமாக செயல்படுபவை.

    போபால் விபத்தை ஏன் குறிப்பிட்டேன் என்றால், நாளை இங்கு ஏதேனும் விபத்து நடந்தால் போபால், தமிழக மீனவர்களை போல் அரசியல்வாதிகள் மக்களை கை கழுவிவிடுவார்கள். இது நூறு விழுக்காடு உறுதி.

    அணு உலை முழுமையாக பாதுகாப்பானது என்பதை நிச்சயம் ஏற்கமுடியாது.

    அணு உலைகள் இன்று உலகில் எங்குமே விலை போகாது - இந்தியாவை தவிர.

    ReplyDelete
  6. @ ஆனந்த் : நண்பருக்கு வணக்கம் , தங்கள் பதிலுரைக்கு நன்றிகள் .

    // IAEA , WANO, UNO இன்னும் என்ன என்ன இருக்கின்றனவோ, அவை எல்லாம் அமெரிக்கா மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு மட்டுமே சாதகமாக செயல்படுபவை. //
    தங்கள் கருத்து தவறானது . அணு சக்தியை ஆக்கப்பூர்வ சக்திக்கு மாத்திரம் பயன்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆரம்பிக்க பட்டது தான் இந்த அமைப்புகள் . WANO என்ற World Association of Nuclear Operators என்ற அமைப்பின் தற்போதைய தலைவராக ஒரு இந்தியர் ( Dr ஜெயின் ) அவர்கள் தான் உள்ளார் .

    //அணு உலைகள் இன்று உலகில் எங்குமே விலை போகாது - இந்தியாவை தவிர.//
    தங்களது இந்த கருத்தும் தவறானது . உலகம் முழுவதும் அணு சக்திக்கு நேராக தான் தங்கள் கவனத்தை திருப்பி வருகிறது . என்ன நான் சொல்லுவது தங்களுக்கு ஆச்சரியமாய் இருக்கிறதா ...?

    நமது நாட்டின் அருகில் உள்ள பங்களாதேஷ் தன்னுடைய மின் பற்றாக்குறையை தீர்க்க அணுமின் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது . தகவலுக்கு : http://www.energy-daily.com/reports/Bangladesh_To_Build_Nuclear_Power_Plant_999.html

    மிக குட்டி நாடான இஸ்ரேல் கூட மின்சாரதிர்க்காக அணுமின் நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது . தகவலுக்கு : http://www.nytimes.com/2010/03/10/world/middleeast/10nukes.html

    சவுதி அரேபியாவில் , 2030 ம் வருடத்திற்குள் 16 அணுமின் நிலையங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது . தகவலுக்கு : http://www.alarabiya.net/articles/2011/06/02/151472.html

    மேலும் பல நாடுகளின் டெஸ்ட் ரியாக்டர் மற்றும் கட்டுமான பணிகள் குறித்த இந்த தகவலையும் காணுங்கள் . http://en.wikipedia.org/wiki/List_of_nuclear_reactors

    நன்றி என்னை புரிந்து கொண்டதற்கு .....!

    ReplyDelete
  7. உங்கள் பதில்களுக்கு நன்றி.

    நீங்கள் குறிப்பிட்டுள்ள நாடுகள் இஸ்ரேலை தவிர வளர்ச்சியடைந்த நாடுகளாகும். வளர்ச்சியடைந்த தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகள் புதிதாக அமைக்க முடிவு செய்தனவா, உதாரணம் காட்டுங்கள். வளர்ச்சியடைந்த நாடுகள் அனைத்தும் மூடவே முற்படுங்கின்றன. அரேபியா பங்களாதேஷ் நாடுகள் தொலைநோக்கு பார்வை இல்லாதவை.

    UNO போன்ற அமைப்புகள் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு மட்டுமே சாதகமாக செயல்படும் என்று சொல்லியிருந்தேன் உதாரணம் இலங்கை இன படிகொலையை கண்டோகொள்ளவில்லை. ஆனால் லிபியா ஈராக் போன்ற நாடுகளை அடிமைபடுதுவதிலேயே குறியாக உள்ளன.

    2009-ல் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது செனட்டராக இருந்த ஒபாமா, ஆற்றல் பற்றி பேசிய இரண்டு கருத்துக்கள் முக்கியமானவை: அணுமின்சாரம் எடுக்கப் பயன்படுத்தப்பட்ட அணுஎரிபொருளை (Spent Fuel) பாதுகாப்பாக கழிக்க (dispose) வழியில்லை. அதனால் நமக்கு அணுஉலைகள் மூலமான மின்சாரம் வேண்டாம்!

    தமிழர் கண்டுபிடித்த ப்ளூ பாக்ஸ் என்ற புதிய தொழில் நுட்பம் அமெரிக்காவில் இப்போது பிரபலமடைந்து வருகிறது. இதையும் பரவலாக பயன்படுத்த ஆரம்பிக்கலாம்
    http://www.sinthikkavum.net/2011/09/blog-post_1763.html

    ReplyDelete
  8. @ ஆனந்த : நண்பருக்கு வணக்கம் . தங்கள் கருத்துரைக்கு நன்றி .

    // அரேபியா பங்களாதேஷ் நாடுகள் தொலைநோக்கு பார்வை இல்லாதவை.//
    அப்படியா ...! அவை தொலை நோக்கு பாரவையுடன் தான் இந்த திட்டத்திற்கு வருகின்றன என்பது எனது கருத்து..

    // வளர்ச்சியடைந்த தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகள் புதிதாக அமைக்க முடிவு செய்தனவா, உதாரணம் காட்டுங்கள்.//
    நண்பரே ... பல உதாரணங்களை என்னால் காட்ட முடியும் ... அமெரிக்கா மற்றும் ரசியா போன்ற நாடுகள் வளர்ந்த நாடுகள் என்றால் , அவைகளையே உதாரனத்திற்க்கு எடுத்து கொள்ளுவோம் .

    அமெரிக்காவின் எதிர்கால அணுமின் திட்டங்கள் குறித்த தகவலுக்கு http://www.world-nuclear.org/info/inf41.html கொஞ்சம் பாருங்கள் .

    ரஷ்யா தனது அணுமின் திட்டங்களை அதிகரித்து இருக்கிறது . தற்பொழுதும் அது அநேக அணுமின் நிலையங்களை கட்டி வருகிறது . தகவலுக்கு கொஞ்சம் http://en.wikipedia.org/wiki/Novovoronezh_Nuclear_Power_Plant_II மற்றும் http://en.wikipedia.org/wiki/List_of_nuclear_reactors பாருங்கள் .

    ஏன் , புகுஷிமா விபத்து நடந்த பிறகு , ஜப்பான் தனது அனைத்து அணுமின் நிலையங்களையும் மூட வில்லை . மாறாக , புகுஷிமா அணுமின் நிலையம் சீக்கிரம் தனது உற்பத்தியை ஆரம்பிப்பதற்காக சரி செய்யப்பட்டு வருகிறது என்பது கூடுதல் தகவல் .

    நீங்கள் சொன்னது போல பளு பாக்ஸ் தொழில் நுட்பத்தில் மின்சாரம் தயாரிக்கலாம் . யானை பசிக்கு சோளப் பொரி போன்றது அது ..

    நன்றி .. தங்கள் கேள்விகள் என்னை ஊக்குவிக்கிறது ...

    ReplyDelete
  9. // நீங்கள் சொன்னது போல பளு பாக்ஸ் தொழில் நுட்பத்தில் மின்சாரம் தயாரிக்கலாம் . யானை பசிக்கு சோளப் பொரி போன்றது அது ..

    இப்போது தடுமாறும் அணைத்து சிறு மற்றும் நடுத்தர நிறுவனகள பயன்படுத்தலாம் அல்லவா? உண்மையில் கூகிள் மற்றும் சில அமெரிக்க நிறுவனகள் இதனால் ஏராளமான நிதி சேமித்து உள்ளன. அப்படி என்றால் அமெரிக்க அரசு வழங்கும் மின்சாரம் இதைவிட விலை அதிகம் அல்லவா.

    இப்போது ஆபத்தான கூடங்குளம் அணு உலையில் பயனடையப்போவது யார்? நெய்வேலி மூலம் கிடைக்கும் மின்சாரத்தில் இருந்து கர்நாடகாவுக்கு 11 கோடி யூனிட் மின்சாரமும், கேரளாவிற்கு 9 கோடி யூனிட் மின்சாரமும், ஆந்திராவுக்கு 6 கோடி யூனிட் மின்சாரமும் செல்கிறது. இப்படியாக நாள்தோறும் தமிழ்நாட்டில் இருந்து 26 கோடி யூனிட் மின்சாரம் செல்கிறது. தமிழ்நாட்டின் மின்சாரப் பற்றாக்குறை ஒரு நாளைக்கு 22 கோடி யூனிட். நெய்வேலி மின்சாரம் முழுவதும் தமிழ்நாட்டிற்கு மட்டும் பயன்பட வேண்டும் என்றால் தமிழ்நாட்டிற்கு மின்சாரச் சிக்கலே வராது. ஆனால் காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு போன்றவை அந்தந்த தேசிய இனங்களுக்கு மட்டுமே சொந்தம் என அவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். காவிரியில் இருந்து கூட அணை இனி தாங்காது எனும் போதுதான் தமிழ்நாட்டிற்கு நீர் திறந்துவிடப்படுகிறத.

    இப்போதே கல்பாக்கம் நெய்வேலி மற்றும் கூடங்குளத்தில் மலையாளிகளே நிறைய பேர் வேலை செய்கிறார்கள்.

    ReplyDelete
  10. இனி இந்தியாவில் எந்த பிற மாநிலங்களிலும் அணு உலை கட்ட அனுமதிக்க மாட்டார்கள். ஸ்டெர்லைட் உட்பட எவை எல்லாம் துரத்தப்பட்டதோ அவை எல்லாம் கடைசியில் தமிழகமே வந்து சேரும்.

    ReplyDelete
  11. aanand miga thelivaaga kooriyullaar.paaraatukkal.mr.iruthayan,manithan minsaaaram illaamal uyir vaazhamudiyum .100 per vaazha 900per saaga vendumaa?SANTHILAL.

    ReplyDelete
  12. வணக்கம் நண்பரே நீங்கள சொல்லி இருப்பது முற்றிலும் தவறான விடயம். அணுசக்தி என்பது மிகபெரிய அழிவு வழியே, அது எப்படி என்று விளக்கும் விடியோ சிந்திக்கவும் இணையதளத்தில் "தினமலருக்கு செருப்படி" என்கிற பெயரில் வைக்கப்பட்டுள்ளது. உங்களது கேள்விகளுக்கும் நீங்கள் இதுவரை எழுதிவந்த கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த எல்லா பதிவுகளுக்கும் அந்த விடியோ செய்தி விளக்கமாக அமையும் என்று நம்புகிறேன். அந்த அளவுக்கு "அணு ஆற்றல் குறித்து தொடக்கம் முதல் இறுதிவரை விளக்கப்பட்டுள்ளது. அரசு பயங்கரவாதிகள் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்தி கொள்ளவும். அந்நிய முதலீடுகளை கவரவும் அடிக்கும் கூத்தே இது. இதுதான் நாட்டின் உண்மையான முன்னேற்றம் என்று நீங்கள் தவறாக விளங்கி வைத்துள்ளீர்கள். விடியோவை பாருங்கள் உங்களுக்கு மேலதிகமான தகவல்கள் தேவை என்றால் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி தோழரே.

    ReplyDelete
  13. @ PUTHIYATHENRAL : நண்பருக்கு வணக்கம் . தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

    // வணக்கம் நண்பரே நீங்கள சொல்லி இருப்பது முற்றிலும் தவறான விடயம்.//
    மிக எளிதாக எனது அத்தனை பதிவுகளிலும் இந்த கருத்தை பதிவு செய்துள்ளீர்கள் . ஆனால் எனது பதிவுகள் அனைத்தும் மிகுந்த ஆதாரத்துடன் எழுத பட்டிருக்கும் போது , நீங்கள் எளிதாக தவறு என்று சொல்லுவதை ஏற்று கொள்ள முடியவில்லை .

    நீங்கள் இன்னும் , அணுமின் சக்தியை குறித்த குறுகிய / தவறான கண்ணோட்டத்தில் காண்பதால் தான் தங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை என நினைக்கிறேன் . உங்களது கேள்விகளை நீங்கள் முன் எடுத்து வைக்கலாமே . நாம் ஆரோக்கிய விவாதம் செய்வோம்.

    தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி

    ReplyDelete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி